சூப்பர் ஸ்டாரை கதறவிட்ட சிவகார்த்திகேயன்.. அழுது அழுது சட்டையே ஈரமாயிடுச்சு

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வெற்றி நடை போட்டு வருகிறது. இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்திக்கு தற்போது ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். அவருடைய வாழ்க்கையில் நடந்த அனுபவங்களையும், அவர் அன்றாடம் சந்தித்த சில விஷயங்களையும் வைத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.

சிறுவயதிலிருந்து மகன் மீது அக்கறை கொள்ளும் அப்பா அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் கோபத்தின் மூலம் தனது அன்பை வெளிப்படுத்துகிறார். அதை புரிந்து கொள்ளாத மகன் இறுதியில் அப்பாவின் உண்மையான அன்பை புரிந்து கொள்கிறார்.

இதுதான் தற்போது பல வீடுகளிலும் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி ஒரு உணர்வுபூர்வமான கதையை திரையில் பார்த்த மக்கள் கண்ணீருடன் உணர்ச்சிவசப்படுகின்றனர். இதுதான் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியாக சொல்லப்படுகிறது.

இந்த கேரக்டர்களின் மூலம் தங்களுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்திய சமுத்திரகனி மற்றும் சிவகார்த்திகேயனுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இந்தப் படத்தை பார்த்து கண்கலங்கி இருக்கிறார்.

அப்பாவின் பாசத்தை காட்டும் விதத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் அனைத்தும் மிகவும் நன்றாக இருப்பதாகவும், அதை பார்த்து என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து படத்தை பற்றி மிகவும் புகழ்ந்து பாராட்டி இருக்கிறார்.

படத்தில் அவருடைய நடிப்பு அருமையாக இருந்தது என்றும், இறுதிக் காட்சிகளைப் பார்த்து அழுது அழுது தனது சட்டை கூட நனைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது சூப்பர் ஸ்டாரே டான் திரைப்படத்தை பாராட்டி இருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அந்த விதத்தில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என்று சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்