72 மணி நேர விரதம், பத்து வருட உழைப்பு.. ஆடு ஜீவிதம் படத்திற்காக உயிரை பணயம் வைத்த பிரித்விராஜ்

Aadujeevitham: இஷ்டத்துக்கு சாப்பிட்டு, நிம்மதியா தூங்கு ஜாலியா ஒரு வாழ்க்கை வாழுவோம். திடீர்னு ஒரு நாளு கண்ணாடி முன்னாடி நின்னு பாக்கும்போது என்ன இப்படி எடை ஏறி இருக்கேன்னு ஒரு கவலை வரும். அதுக்கப்பறம் ஏறின பத்து, பதினைந்து கிலோவை குறைப்பதற்கு பெரும்பாடு படுவோம்.

ஆனா நடிகர் பிரித்விராஜ் அவருடைய சாதாரண எடையிலிருந்து 31 கிலோவை அசால்ட் ஆக குறைத்து இருக்கிறார். இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் பிரித்விராஜ் நடித்திருக்கும் படம் தான் ஆடு ஜீவிதம். மொழி, கண்ணாமூச்சி ஏனடா போன்ற படங்களில் பிரித்விராஜ் துருதுருவென்று ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

அதன் பின்னர் அவருடைய மலையாள படங்களையும் பாலோ செய்து பார்க்கும் அளவுக்கு அவரை நமக்கு பிடித்துப் போயிருந்தது. இந்த ஆடு ஜீவிதம் படத்தின் போஸ்டரை பார்த்துவிட்டு பிரித்வி ராஜா இது என்ன ஆச்சு இவருக்குன்னு தான் முதல்ல தோணுச்சு.

ஆனால் அந்தப் படத்திற்காக அவர் உயிரையே பணயம் வைத்திருக்கிறார். தமிழில் உலக நாயகன் கமலஹாசன் மற்றும் சீயான் விக்ரம் தான் இது போன்ற வேலைகள் எல்லாம் அசால்ட்டாக செய்வார்கள். அதே தான் பிரித்விராஜ் மலையாளத்தில் செய்திருக்கிறார்.

72 மணி நேர விரதம், பத்து வருட உழைப்பு

கோமாளி படத்திற்காக நடிகர் ஜெயம் ரவி, 15 கிலோ எடை குறைத்தது பெரிய அளவில் பேசப்பட்டது. பிரித்விராஜ் 31 கிலோ எடையை ரொம்பவும் கஷ்டப்பட்டு குறைத்து இருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட 72 மணி நேரம் விரதம் இருப்பாராம், அதன் பின்னர் வெறும் பிளாக் டீ அல்லது தண்ணி மட்டும் தான் குடிப்பாராம்.

இப்படித்தான் உடல் எடையை குறைத்து இருக்கிறார். இது பற்றி பிரித்திவிராஜ் அளித்த பேட்டியில், அந்த கேரக்டருக்கு இது போன்ற உடலமைப்பு தேவைப்பட்டதால் தான் இதை விரும்பி செய்ததாக சொல்லி இருக்கிறார்.

ஆடு ஜீவிதம் படம் ஒரு நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதை. கிட்டத்தட்ட 2008 ஆம் ஆண்டில் இருந்து இந்த படத்தின் வேலைகள் ஆரம்பித்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா. கதை எல்லாம் தயாராகி 2010 ஆம் ஆண்டு தான் பிரித்விராஜ் இந்த கதையின் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்போதைய மலையாள சினிமாவின் பட்ஜெட் இந்த படத்துடன் ஒத்துப் போகாததால் படம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இறுதியாக 2018 ஆம் ஆண்டு தான் இந்த படத்தின் வேலைகள் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டது.

நிஜமான பாலைவனங்களில் காட்சிகளை எடுக்க வேண்டும் என்று இயக்குனர் உறுதியாக இருந்ததால் தான் இவ்வளவு தாமதம் என்று கூட சொல்லலாம். ஆடு ஜீவிதம் படம் சவுதி பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் வேலைக்கு போகும் இந்தியரின் கதை.

முதலில் சூழ்நிலை தெரியாமல் அந்த இடத்திற்கு போவதும், பின்னர் ஐயோ இப்படி ஒரு இடத்தில் வந்து மாட்டிக்கிட்டோமே என பரிதவிப்பதும், அதன் பின்னர் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் சக மனிதரிடம் பேசாமல் பேசும் திறமையை கூட இழந்த நொந்து போன மனிதரின் நிலைமையையும் சொல்லுகிறது இந்த படம். வசமாக மாட்டிக் கொண்ட ஹீரோ அந்த இடத்தில் இருந்து தப்பித்து சொந்த நாட்டுக்கு வருகிறாரா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதை.

கேரளாவில் படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அட்வான்ஸ் புக்கிங் எல்லாம். நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த படம் வரும் வியாழக்கிழமை அன்று ரிலீஸ் ஆகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்