மாமனிதனாக வாழ்ந்திருக்கும் விஜய் சேதுபதி.. இந்த முறை ஹீரோவா ஜெயிப்பாரா.? சுடச்சுட விமர்சனம்

விக்ரம் திரைப்படத்தில் சந்தனம் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து நம்மை மிரள வைத்த விஜய் சேதுபதியின் நடிப்பில் இன்று மாமனிதன் திரைப்படம் வெளிவந்துள்ளது. சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் இந்த திரைப்படம் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தென்மேற்குப் பருவ காற்று, தர்மதுரை வரிசையில் இந்த மாமனிதன் திரைப்படமும் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவுக்கு ஒரு எதார்த்தமான குடும்பத் தலைவனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி வழக்கம்போல எல்லா காட்சிகளிலும் ஸ்கோர் பண்ணுகிறார்.

கதைப்படி மனைவி, குழந்தைகள் என்று மனநிறைவான வாழ்க்கையை வாழும் ஆட்டோ ஓட்டுனர் விஜய் சேதுபதி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொள்கிறார். அதற்காக தன் குடும்பத்தையும், ஊரையும் விட்டு தலை மறைவு வாழ்க்கையை அவர் வாழ்கிறார்.

பின்னர் ஒரு கட்டத்தில் அவர் தன் மீது இருக்கும் களங்கத்தைப் போக்கி தன் குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. ஒரு சாமானிய மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் பல எதார்த்தமான சம்பவங்களை நம் கண் முன்னே நிறுத்துகிறது இந்த படம்.

மனசாட்சிக்கு பயந்து வாழ்பவன் தான் மாமனிதன் என்ற விஷயத்தை இயக்குனர் தெளிவாக கூறியிருக்கிறார். விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்திருக்கும் காயத்ரி, நண்பராக வரும் குரு சோமசுந்தரம் உள்ளிட்ட கதாபாத்திரங்கள் தங்களுக்கான வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பல இடங்களில் அழுத்தமான காட்சிகளுடன் விறுவிறுப்புடன் செல்லும் கதை சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்தும் உணர்வையும் கொடுக்கிறது. மேலும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து கொடுத்துள்ள இசையும் சுமார் ரகமாக தான் இருக்கிறது.

மற்றபடி படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களும், கதாபாத்திரங்களின் தேர்வும் அற்புதமாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது வில்லனாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ள விஜய் சேதுபதிக்கு இப்படம் ஹீரோவாக ஒரு வெற்றியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சினிமாபேட்டை ரேட்டிங் – 2.5 / 5

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்