தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைக்கு பின் இப்படி ஒரு அறிவியலா.? தெரிந்து கொள்வோம் வாங்க

Tamil Traditional: அந்த காலத்துல நாங்க எல்லாம் அப்படின்னு தாத்தா பாட்டி சொல்ல கேட்டிருப்போம். ஆனால் இப்படி ஆரம்பித்தாலே இன்றைய இளசுகள் ஐயோ சாமி ஆளை விடு என தெறித்து ஓடுகிறார்கள்.

ஆனால் நம் முன்னோர்களின் பழக்க வழக்கங்களுக்கு பின்னால் பல மருத்துவ ரகசியங்களும் அறிவியல் சார்ந்த விஷயங்களும் இருக்கிறது. அதில் ஒன்றுதான் தமிழர்களின் உணவு முறை.

அதில் தலைவாழை இலையில் அறுசுவை பதார்த்தங்களோடு சாப்பாடு போடுவதற்கு பின்னால் பல மருத்துவ ரகசியங்கள் உள்ளது. இலையின் குறுகலான பகுதியில் உப்பு, ஊறுகாய், இனிப்பு என தொடங்கி காய்கறி, கூட்டு என வைப்பார்கள்.

அதேபோல் இலையின் அகலமான பகுதியில் சாதம் போட்டு அதில் பருப்பும் நெய்யும் கலந்து முதலில் சாப்பிட வேண்டும் என்பதுதான் முறை. அதன் பிறகு ரசம், தயிர் என உணவினை சாப்பிட்டு முடிப்போம்.

இதில் இலையின் இடது பக்கத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு வைப்பது எதற்காக என்றால் அவற்றை நாம் குறுகிய அளவு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அது செரிமானத்திற்கு உதவக்கூடிய உமிழ் நீரை சுரக்க வைக்கும்.

தமிழர்களின் உணவு முறை

அடுத்து செரிக்கும் தன்மை குறைந்த பருப்பும் நெய்யும் கலந்து சாப்பிடுவோம். இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதாவது பிடி அன்னத்திற்கு பிடி சதை வளருமாம்.

அது சரி பருப்பை ஏன் நெய் உடன் சேர்த்து பரிமாறுகிறார்கள் என்று தெரியுமா? அதற்கும் ஒரு அறிவியல் சார்ந்த காரணம் இருக்கிறது. அதாவது நெய்யுடன் சேர்த்து உண்பதால் துவரம் பருப்பின் சூடு, மலக்கட்டு அனைத்தும் நீங்கி நினைவாற்றல், கண்களின் ஒளி ஆகியவை கூடுமாம்.

இதை அடுத்து பரிமாறப்படும் காய்கறிகள் மற்றும் குழம்பு வகைகள் அனைத்தும் வயிற்றை நிரம்பச் செய்யும். அடுத்ததாக துவரம் பருப்பு வடித்த நீருடன் மிளகு, சீரகம், பூண்டு கலந்து செய்த ரசம் பரிமாறப்படும்.

இப்படி சாப்பிடும் போது அக்னி மாந்தமும், வாதமும் நீங்கும். இறுதியாக தயிர் சாப்பிடுவோம். அதை இன்றைய மருத்துவர்கள் பணியில் சொன்னால் நல்ல பாக்டீரியா அதில் இருக்கிறது. இது செரிமானத்திற்கும் உதவும்.

இதுவே தமிழர்களின் அறிவியல் சார்ந்த உணவு பழக்க வழக்கமாகும். இதில் நாம் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயமும் இருக்கிறது. நம்முடைய பண்பாட்டு உணவு திரவம் நிறைந்ததாக தான் இருக்கும்.

ஆனால் இப்போதெல்லாம் திட உணவுகளான பீட்சா போன்றவற்றை சாப்பிடுகிறோம். அதை விழுங்குவதற்கு சிரமப்பட்டு கூல் ட்ரிங்க் வாங்கி உள்ளே தள்ளுகிறோம்.

அது மட்டுமா சாப்பிட்டு முடித்தவுடன் டெஸர்ட் என்ற பெயரில் இனிப்புகளை உண்கிறோம். இதைத்தொடர்ந்து செய்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடும். அதேபோல் செரிமானத்தையும் தாமதப்படுத்தும்.

மேலும் இந்த பழக்கத்திற்கு நாம் அடிமையாகி விடுவோம். இது பல உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். அதனால்தான் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் தமிழர்கள் சாப்பிடும் முறையை வழக்கமாக்கி இருக்கின்றனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது.

அறிவியலும் மருத்துவ ரகசியங்களும்

Next Story

- Advertisement -