செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 22, 2024

ரஹ்மான் வந்தது என்னுடைய சுயநலம்தான்.. வெளிப்படையாக ஒப்புக்கொண்ட பார்த்திபன்

தமிழ் சினிமாவில் ஏதாவது ஒரு புதுமையான விஷயங்களை செய்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன். ஒரு நடிகராக இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவர் இயக்கிய திரைப்படங்களுக்கு திரையுலகில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் இவர் தயாரித்து, இயக்கி, நடித்திருந்த ஒத்த செருப்பு திரைப்படம் பலரின் பாராட்டுகளையும் பெற்றது. பார்த்திபன் மட்டுமே நடித்திருந்த அந்த திரைப்படம் அவரின் வித்தியாசமான முயற்சிக்காக விருதுகளையும் பெற்றது.

அதை தொடர்ந்து அவர் தற்போது இரவின் நிழல் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். கிட்டத்தட்ட 90 நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்த திரைப்படத்தை பார்த்திபன் சிங்கிள் ஷாட்டில் எடுத்து முடித்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.

இதனால் இந்த திரைப்படம் எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த திரைப்படம் உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இது குறித்து பார்த்திபன் தற்போது வெளிப்படையான ஒரு உண்மையை கூறியிருக்கிறார் அதாவது ஏ ஆர் ரகுமான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர்.

அந்த வகையில் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்தால் ஆஸ்கர் விருது கிடைக்கும் என்ற நப்பாசை எனக்கு இருந்தது. அதனால் தான் நான் அவரை இந்த படத்திற்கு அணுகினேன். ஒரு வகையில் இது என்னுடைய சுயநலம் தான் என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

மேலும் நான் இந்த படத்தின் கதையை கூறியதுமே ஏ ஆர் ரகுமான் மிகவும் ஆச்சரியப்பட்டார். ஒரே ஷாட்டில் இந்த படத்தை எப்படி எடுப்பீர்கள் என்று என்னிடம் விசாரித்தார். நான் அனைத்தையும் அவருக்கு தெளிவாக விளக்கினேன். அதன் பிறகு அவர் இந்த படத்தில் பணியாற்ற சம்மதித்தார்.

ஆனால் சம்பளம் பற்றி அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று பார்த்திபன் இசை புயலை பற்றி மிகவும் உயர்வாக கூறியிருக்கிறார். மேலும் ஏ ஆர் ரகுமானின் இசை இந்த படத்திற்கு மிகவும் பக்கபலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் இரவின் நிழல் பார்த்திபனின் ஆஸ்கர் கனவை நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- Advertisement -spot_img

Trending News