ஆடுகளம் படத்திற்காக தேசிய விருதை வென்ற வெற்றி மாறன் தற்போது அசுரன் படத்திற்காக இரண்டாவது முறையாக மீண்டும் தேசிய விருதை வென்ற மகிழ்ச்சியில் உள்ளார். இந்த மகிழ்ச்சியோடு மேலும் ஒரு சந்தோசமான செய்தியை வெற்றி மாறன் ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.
அதன்படி வெற்றி மாறன் இயக்கத்தில் அடுத்தடுத்து உருவாக உள்ள படங்களின் அறிவிப்புகள் தான் தற்போது வெளியாகி உள்ளது. வெற்றி மாறன் தற்போது நடிகர் சூரியை முதன்மை கதாபாத்திரமாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். காடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதால், படப்பிடிப்பில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த படம் முடிந்த பின்னர் நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற பிரம்மாண்ட படத்தை வெற்றி மாறன் இயக்க உள்ளார். விடுதலை படத்தால் தான் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறதாம். எனவே விரைவில் விடுதலை படத்தை நிறைவு செய்துவிட்டு வாடிவாசல் படத்தில் வெற்றி மாறன் கவனம் செலுத்த உள்ளாராம்.
இந்நிலையில் இவரின் அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்புகளை சமீபத்தில் பேட்டி ஒன்றில் வெற்றிமாறன் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “விஜய்யை சந்தித்து ஒரு படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான். மற்ற படங்களை முடித்துவிட்டு வாருங்கள் என விஜய் கூறியுள்ளார். விஜய்யுடன் இணைந்து படம் இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகப்பெரிய மகிழ்ச்சி” என வெற்றிமாறன் கூறியுள்ளார்.
அதேபோல் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்த போது இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணுவோம் என கமல்ஹாசன் உறுதி அளித்ததாகவும் வெற்றி மாறன் கூறியுள்ளார். இதுதவிர ஏற்கனவே வெற்றி மாறன் தனுஷ் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தையும் வெற்றி மாறன் இயக்க உள்ளாராம்.
![dhanush-vetrimaran](http://192.168.1.7/cinemapettai/wp-content/uploads/2021/01/dhanush-vetrimaran.jpg)
விஜய், கமல், சூர்யா, தனுஷ் என அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களை இயக்க உள்ளதாக வெற்றி மாறன் அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நிச்சயம் இந்த படங்கள் விருதுகளை வெல்லும் என்றும் ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.