அடுத்தடுத்து 5 இயக்குனர்களை தொக்கா தூக்கிய ரஜினி.. ரெண்டு வருஷத்துக்கு தலைவர் ராஜ்ஜியம் தான்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் அவர்கள் அடுத்து யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது. கூட்டணி என்றவுடன் மீண்டும் அரசியலிலா என்று நினைக்க வேண்டாம். அதான் அதெல்லாம் செட் ஆகாது என்று பின்வாங்கி விட்டாரே சூப்பர் ஸ்டார். அவர் தற்போது, நடிக்கப் போகும் அடுத்த படத்தில் எந்த இயக்குனரோடு அவர் இணையப்போகிறார் என்றுதான் சினிமா வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வந்தன.

இருந்தாலும் அவரின் உடல் நிலை அவரின் குடும்ப பிரச்சனை என நொந்து போய் உள்ள ரஜினிகாந்த் இனி படம் நடிப்பாரா, அவரால் பழையபடி மக்களை மகிழ்விக்க முடியுமா என்று நினைத்த போது, “நான் யானை அல்ல, குதிரை : யானை விழுந்தா எந்திரிக்க லேட்டாகும். நான் குதிரை, விழுந்தா டக்குனு எந்திரிப்பேன்”என்று அவர் சொன்னது போல இந்த குதிரை ஓட்டத்தை நிறுத்த வாய்ப்பே இல்லை போல. சரி ஏதோ ஒரு இயக்குனர் கிடைத்து விட்டார் போல படம் தயராக போகிறது என்று நினைத்தால், ஐந்து இயக்குனர்களை கமிட் செய்து விட்டு கெத்தாக சூட்டிங்கிற்கு காத்துக்கொண்டு இருக்கிறார்.

என்னப்பா இந்த மனுஷன் இப்படி இருக்காரு என்று யோசிப்பதற்கு முன்னால் அந்த ஐந்து இயக்குனர்களின் லிஸ்டை எடுத்து பார்த்தால் “இனிமே தான் சிறப்பான தரமான சம்பவங்களை நீ பார்க்க போற” என்று சூப்பர் ஸ்டார் சொல்வது போல தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்கள் அந்த லிஸ்டில் இருக்கின்றனர். அதில் பாலிவுட் இயக்குனரான பால்கியும் இருக்கிறார். முதலில் அவரிடம் கதை கேட்ட ரஜினிகாந்த் ஓகே செய்து வைத்து இருக்கிறாராம். இந்தப் படத்தில் மற்றுமொரு சிறப்பு இந்த படத்தை தயாரித்து இசையமைக்கப் போவது ரஜினியின் குருசாமியான இளையராஜாதான். 28 ஆண்டுகள் கழித்து இந்த லெஜெண்ட் கூட்டணி கை கோர்க்கிறது.

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் மூலம் வசூல் கிங் இயக்குனர் என்ற பெயர் பெற்றவர்தான் இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இவர் தற்போது தளபதியின் பீஸ்ட் பட வேலைகளில் பிசியாக இருக்கிறார். இந்த படம் முடிந்த கையோடு அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டாரோடு கை கோர்க்க உள்ளார். டார்க் காமெடியை வைத்து படத்தின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தும் நெல்சனின் இயக்கம் சூப்பர் ஸ்டாருக்கு எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

கடந்த 2019 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கிளாசிக் ரஜினிகாந்தை கண் முன்னே கொண்டு வந்த படம் தான், பேட்ட. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இவர்கள் இணைந்தால் மாஸாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பேசப்பட்டது. இவரிடமும் கதை கேட்ட சூப்பர் ஸ்டார், இவரையும் அந்த லிஸ்டில் சேர்த்துக் கொண்டு உள்ளார். ஆக பேட்ட வேலன் போல ஒரு கெட்டப்பில் சூப்பர் ஸ்டாரை மீண்டும் பார்க்கப்போகிறோம் என்பதும் உறுதியாகிவிட்டது.

கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படம் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர்தான் தேசிங்கு பெரிய சாமி. இந்த படத்தை பார்த்து விட்டு தேசிங்கு பெரிய சாமிக்கு போன் செய்து பாராட்டியதோடு மட்டுமில்லாமல், தனக்கும் ஒரு கதை எழுதுங்கள் என்று அன்றே சூப்பர் ஸ்டார் கூறி இருந்தார். அது தற்போது நிஜமாகி உள்ளது. தேசிங்கு பெரியசாமியோடு ஒரு த்ரில்லர் கதையில் ரஜினி இணையப்போகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கடைசியாகத்தான் வந்து சேர்ந்தார் விநாயக் மகாதேவ் என்பது போல இந்த லிஸ்டில் பல தேசிய விருதுகளை அறுவடை செய்த இயக்குனர் வெற்றி மாறனும் இருக்கிறார். யாரும் எதிர்பார்க்காத ஒரு கூட்டணி என்றால் அது இதுதான். ஹீரோக்களுக்கு தேவை இல்லாத மாஸ் காட்சிகள் இல்லாமல், கதைப்போக்கில் ஹீரோக்களை மாஸாக காண்பித்து அதில் ரசிகர்களை கை தட்ட வைப்பதுதான், வெற்றிமாறனின் ஸ்டைல்.

இதுவும் ரஜினி என்னும் முரட்டு ஸ்டைலும் இணையும் போது எப்படி இருக்குமோ தெரியவில்லை என்று ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் திளைக்கின்றனர். இது போக இந்த வருடமே முதலில் மூன்று படங்களை முடித்து வெளியிட 50 முதல் 60 நாட்கள் வரை ரஜினிகாந்த் கால்ஷீட் கொடுத்து அதிர வைத்து இருக்கிறாராம். ஆக இந்த வருடம் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் தான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்