தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளுக்கு பெயர் போனவர் இயக்குனர் மிஷ்கின். அந்த வகையில் இவரது இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் பிசாசு. அப்படத்தில் பிசாசு எதிர்மறை கதாபாத்திரத்தில் உருவாக்காமல் தேவதையை போல உருவாக்கியிருந்தார் மிஷ்கின்.
வித்தியாசமான முறையில் உருவாகி இருந்ததால் அப்படம் பெரியளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் மிஷ்கின். இப்படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக கார்த்திக் ராஜா மிஷ்கின் படத்துக்கு இசையமைக்க உள்ளார்.
மற்றொரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணா நடித்து வருகிறார். நடிகர் விஜய் சேதுபதியும் சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பெரும்பாலானக் காட்சிகளை இயக்குனர் மிஷ்கின் படமாக்கி விட்டாராம்.
இன்னும் கிளைமேக்ஸ் மற்றும் ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்படவில்லையாம். இந்த காட்சிகளுக்காக இயக்குனர் மிஷ்கின் திண்டுக்கல் மாவட்டத்தை அடுத்துள்ள வனப்பகுதிகளில் இதுவரை யாருமே படமாக்காத இடங்களை தேர்வு செய்து அதற்காக அனுமதி வாங்கும் முயற்சியில் உள்ளாராம்.
குணா படத்தின் குகைக் காட்சிகள் எப்படி பேசப்பட்டனவோ அதுபோல இந்த லொக்கேஷன்களும் பேசப்படும் என கூறப்படுகிறது. நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் இப்போது இறுதிக் கட்ட படப்பிடிப்பு வேலைகளை மிஷ்கின் தொடங்கி உள்ளார்.
![pisasu-first-look](http://192.168.1.7/cinemapettai/wp-content/uploads/2021/08/pisasu-first-look.jpg)
இப்படத்தில் புதுவிதமான அனமார்பிக் லென்ஸ்களை பயன்படுத்தியுள்ளதால் திரையரங்கில் பார்த்தால் தான் சிறப்பாக இருக்கும் என்பதால் இந்த படம் கண்டிப்பாக திரையரங்கில்தான் ரிலிஸாகும் என இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார். எனவே படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.