கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரைத்துறையை சேர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக, இயக்குநர் மணிரத்னம், ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் ஆந்தாலஜி படம்தான் ‘நவரசா’. கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது உணர்ச்சிகளை அடிப்படையாக கொண்டு, ஒன்பது குறும்படங்களை உள்ளடக்கிய படமாகும்.
இந்நிலையில், இப்படம் குறித்தும் இதில் பணிபுரிந்த கலைஞர்கள் குறித்தும் இயக்குனர் மணிரத்னம் தனது அனுபவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், “நாங்கள் இருவரும் இதற்கு முன்பே ஒரு சில சமூக காரணங்களுக்காக நிதி திரட்டும் செயலில் ஈடுபட்டு இருந்துள்ளோம். கொரோனா தொற்றுநோய் பரவியபோது, ஜெயேந்திரா என்னை அழைத்து, இந்த விஷயத்தில் ஏதாவது செய்ய வேண்டும் எனக் கூறினார். அந்த யோசனையின்படி, முடிந்தவரை திரைத்துறையை சேர்ந்த பலரை ஈடுபடுத்த நினைத்தோம்.
திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவ நினைத்த காரணம், இந்த துறையில் தான் தினசரி கூலி தொழிலாளர்கள் நிறைய உள்ளனர். படப்பிடிப்பு நடக்கும் நாள் மட்டுமே அவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும். ஆனால் கொரோனாவால் நீண்ட காலமாக படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இதனால் நிறைய தொழிலாளர்கள் கடினமான சூழலில் சிக்கித் தவித்து வந்தனர். எனவேதான் இதுபோன்ற விஷயங்களின் மூலம்தான் அவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க முடியும் என்று இந்த திட்டத்தை தொடங்கினோம்.
எங்கள் நோக்கத்தை புரிந்துகொண்டு இதில் வேலைபார்த்த அனைத்து இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் எந்த ஊதியமும் வாங்கவில்லை. அவர்களும் உதவ முன்வந்தனர்” என கூறினார்.