தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி ரசிகர்கள் பலர் தற்போது ‘தலைவி’ படத்தின் ரிலீசுக்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் சமீபத்தில் ரிலீசான இந்த படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, பலரது எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.
மேலும் இந்தப்படத்தில் மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்தப் படத்தை இயக்குனர் விஜய் இயக்க, கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி, தம்பிராமையா, சமுத்திரகனி, மதுபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அதேபோல், இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, பாகுபலி படத்தின் கதாசிரியரான விஜயேந்திர பிரசாத் இந்த படத்தின் கதையில் கதாசிரியராக பணியாற்றியுள்ளார். மேலும் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த மார்ச் 22ஆம் தேதி, கங்கனா ரனாவத் அவர்களின் பிறந்தநாள் அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஒட்டு மொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டதோடு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அந்தவகையில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி தலைவி படத்தில் பணியாற்றியதைப் பற்றியும், கங்கனா ரனாவத் பற்றியும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதாவது சமுத்திரக்கனி ‘தலைவி’ படத்தில் ஆர் எம் வீரப்பன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். இவர் (ஆர் எம் வி) புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பர் ஆவார். இப்படி இருக்க தலைவி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சமுத்திரகனி, தனக்கு ஆர் எம் வி அவர்களின் கதாபாத்திரத்தை கொடுத்ததற்கு படத்தின் இயக்குனரான விஜய்க்கு நன்றி தெரிவித்ததோடு, தன்னால் முடிந்தவரை அந்த கதாபாத்திரத்தை நிறைவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
![AravindSamy-Samuthirakani](http://192.168.1.7/cinemapettai/wp-content/uploads/2021/03/samu.jpg)
தொடர்ந்து பேசிய சமுத்திரக்கனி கங்கனா ரனாவத் முன்பு நின்று நடிப்பதற்கு தான் பயந்ததாக கூறியிருக்கிறார். ஏனென்றால் கங்கனா ரனாவத் அந்த அளவுக்கு அம்மாவின் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்தாராம்.
குறிப்பாக அம்மாவோட ஆத்மாவே கங்கனா ரனாவத் மேல வந்துருச்சுன்னு நினைக்கிற அளவுக்கு சிறப்பாக நடித்தாராம் கங்கனா. மேலும் பேசிய சமுத்திரகனி கங்கனா மிகப்பெரிய உயரத்தை தொட தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
எனவே, சமுத்திரக்கனி, கங்கனாவை பற்றி பேசி இருக்கும் இந்த தகவல்கள் தலைவி படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் ஏற்படுத்தியுள்ளது.