கில்லி ரீ-ரிலீசால் ட்ரெண்டாகும் ஹீரோயின் அறிமுக பாடல்கள்.. இந்த 6 பாட்ட மிஸ் பண்ணாம பாத்துடுங்க

Ghilli Re Release: ‘ஹைதர் கால வீரன் தான் குதிரை ஏறி வருவானோ, காவல் தாண்டி என்னை தான் கடத்தி கொண்டு போவானோ’. என்ற வரிக்கு வெள்ளை நிற பாவாடை சட்டை கையில் வெள்ளை நிற தாவணியுடன் திரிஷா ஆடுவார்.

இந்த பாட்டை வைப் செய்யாத 90ஸ் கிட்ஸ்கள் கிடையாது. ஆனால் கடந்த சில தினங்களாக இந்தப் பாட்டுக்கு 2கே கிட்ஸ்கள் வைத்து செய்து கொண்டு இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் சமூக வலைத்தளத்தில் திரும்பின பக்கம் எல்லாம் இந்த பாட்டு தான்.

டைம் ட்ராவல் பண்ணி 2003 ஆம் வருடத்திற்கு வந்துவிட்டோமோ என்ற சந்தேகம் தான் வருகிறது. எல்லாத்துக்கும் காரணம் கில்லி படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ததுதான். கதாநாயகிகளுக்கு இன்ட்ரோ பாட்டு கூட படத்தில் இருந்து இருக்கிறதா என இப்ப இருக்க இளசுகள் பிரமித்து போய் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் 90ஸ் கிட்ஸ்களுக்கு தானே உண்மை நிலவரம் தெரியும். ஒரு பக்கம் ஹீரோ மாஸ் காட்டிக்கொண்டு தன்னுடைய அறிமுக பாடலுக்கு நடனமாடுவார். அதே நேரத்தில் கதாநாயகிக்கும் அதற்கு சமமான அறிமுக பாட்டை வைத்து கொண்டாடிய தலைமுறை நாம் என்று.

ஒரு வேளை கில்லி படத்தில் வந்த அந்த பாட்டை பார்த்து, பிரமித்து போன 2k கிட்ஸ்கள் நீங்கள் என்றால், அப்படியே உங்கள் போனை எடுத்து இந்த ஆறு பாட்டை மிஸ் பண்ணாம பார்த்துடுங்க.

‘ஒரு ஊரில் அழகே உருவாய்’: சூர்யாவுக்கு சூப்பர் ஹிட் ஆக அமைந்த ஆக்சன் படம் காக்க காக்க. அதிரடி காட்சிகள் நிறைந்த சண்டை படத்தில், ஹீரோயினுக்கு அறிமுக பாடல் வைக்க முடியுமா. கண்டிப்பாக, கௌதம் என நினைத்தால் செய்ய முடியும். ‘She is the fantasy’ என ஆரம்பித்து ஜோதிகாவை ஒரு ராணி போல் காட்டி இருப்பார்கள் அந்தப் பாட்டில். அந்தப் பாட்டு முழுக்க அவர் கட்டியிருக்கும் காட்டன் புடவைகளுக்கு அந்த சமயத்தில் அவ்வளவு ரசிகைகள் இருந்தார்கள். ஸ்கூல் டீச்சர்னா காட்டன் புடவை கட்டி, அதற்கு மேட்ச்சா கம்மல், செயின் போடணும்னு கத்து கொடுத்ததே நம்ம மாயா டீச்சர் தானே.

‘சொந்த குரலில் பாட’: அஜித் மற்றும் ஷாலினி அட்டகாசமாய் ஜோடி சேர்ந்த படம் தான் அமர்க்களம். இந்த படத்தில் மேகங்கள் என்னைத் தொட்டு போவதுண்டு, உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு போன்ற பாடல்கள் இன்றுவரை பேவரைட் தான். இதில் ஷாலினிக்கு சொந்த குரலில் பாட என்று ஒரு அறிமுக பாடல் இருக்கும். பாட்டின் வரிகளுக்கு ஏற்ப ஷாலினி இந்த பாட்டை தன்னுடைய சொந்த குரலில் பாடி இருப்பார்.

‘சின்ன சின்ன ஆசை’: சிறந்த தமிழ் படங்களின் பட்டியலில் எப்போதுமே மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்திற்கு இடம் உண்டு. கிராமத்தில் இருக்கும் கள்ளம் கபடம் தெரியாத கதாநாயகிக்கு இருக்கும் சின்ன சின்ன ஆசையை வைரமுத்து இதில் அழகாக சொல்லி இருப்பார்.’வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை, என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை’ என ஹீரோயின் பாடும்போது, இதுதானாமா உங்க சின்ன சின்ன ஆசை என மெல்லிய சிரிப்பு தான் வரும்.

‘பூ பூக்கும் ஓசை”: மின்சார கனவு படத்தில் பாலிவுட் அழகி கஜோலுக்கு வைத்த அறிமுக பாட்டு தான் பூப்பூக்கும் ஓசை. வழக்கம் போல நடக்கும் சுவாரஸ்யம் இல்லாத வகுப்பறையில் உட்கார்ந்து இருக்கும் கதாநாயகி, திடீரென இசையை பற்றி பாட ஆரம்பிப்பதை போல் ஆரம்பித்து அழகிய பனி மலைகளில் இந்தப் பாட்டு முடியும்.’கண்தூங்கும் நேரத்தில் மௌளனத்தின் ஜாமத்தில் கடிகாரச் சத்தம் சங்கீதம்’ என்று இயல்பான இசையை அருமையாக எழுதியிருப்பார் கவிப்பேரரசு.

‘பூவ பூவ பூவே: ஜோதிகா மற்றும் சூர்யா இருவருக்கும் அழகிய காதல் கதை ஆரம்பித்த இடம்தான் பூவெல்லாம் கேட்டுப்பார் படம். படத்துக்கு ஏத்தது மாதிரி ஹீரோயின் அறிமுக பாடலில் ஜோதிகா, பூவிடம் பேசுவது போல் அந்தப் பாடல் அமைந்திருக்கும். யுவன் சங்கர் ராஜா இசை அவருக்கு பெரிய அடையாளத்தை இந்த படம் வாங்கி கொடுத்தது.

ஷாலாலா ஷாலாலா: படம் முழுக்க குடும்பத்தை இழந்த சோகம், வில்லனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற பயம் என அமைதியாகவே இருக்கும் த்ரிஷாவின் கேரக்டர். இதனாலேயே வில்லன் முத்துப்பாண்டியன் வரவுக்கு முன்பு தனலட்சுமியின் உண்மையான கேரக்டர் என்ன என்பதை சொல்வதற்காக அமைக்கப்பட்ட பாட்டு தான் இது. பாட்டின் இறுதியில் தனலட்சுமிக்கு கடைசியில் காதலனாக வரப்போவது விஜய் தான் என்பதை நாசுக்காக சொல்லி இருப்பார்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்