தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான கிரீடம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் ஏ.எல்.விஜய். இப்படத்தை தொடர்ந்து மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தலைவா, தாண்டவம், சைவம், இது என்ன மாயம், தேவி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார்.
விஜய் இயக்கத்தில் இறுதியாக வெளிவந்த படம் என்றால் அது சமீபத்தில் வெளியான தலைவி படம் தான். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருந்தார். இப்படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம், தலைவா படத்திற்கு பின்னர் நடிகர் விஜய்யுடன் தொடர்பில் இருக்கிறீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஏ.எல்.விஜய், “நிச்சயமாக இப்போதும் நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு தொடர்பில் தான் உள்ளோம்.
அவருக்கான கதைகள் வரும்போது அவரிடம் சொல்லனும்னு நினைக்கிறேன். நிச்சயம் விஜய்யை வைத்து ஒரு படம் எடுக்க உள்ளேன். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்” என கூறியுள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவர் கூட்டணியில் வெளியான தலைவா படம் பல விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக ஓரளவிற்கு நல்ல வெற்றியையே பெற்றது என கூறலாம்.
![thalaiva-2-nd-part](http://192.168.1.7/cinemapettai/wp-content/uploads/2019/06/thalaiva-2-nd-part.jpg)
இந்நிலையில் இவர்கள் இருவர் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது என்ற செய்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலைவா படத்தில் பல வசனங்களை வைத்து சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. தற்போது தலைவி படத்திலும் சில எதிர்மறை கருத்துக்களை தாண்டித்தான் படம் வெளிவந்தது.
விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதையெல்லாம் முடித்த பின்னர் இயக்குனர் ஏ.எல்.விஜய் படத்தில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.