தமிழக இடைக்கால பட்ஜெட், பாமர மக்களுக்காக அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள்!

தமிழக இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் பாமர மக்களுக்காக பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பள்ளி மாணவர்களுக்காக, பாடத்திட்டங்களில் கணினி மற்றும் அறிவியல் பாடங்கள் ஆறு முதல் பத்தாம் வகுப்புகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக சுமார் 2000 புதிய மின்சார பேருந்துகளும், 12,000 மாநகர பேருந்துகளும் கொள்முதல் செய்யப்பட உள்ளது .

அதேபோல் 44 கிலோ மீட்டர் தொலைவிற்கு கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்காக ‘RIGHTS’ என்ற திட்டமும் வகுக்கப்பட்டு, அதற்காக ரூ. 688 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

மேலும் இயற்கை மரணம் மற்றும் இயலாமைக்கு அம்மா காப்பீட்டு திட்டத்தின் கீழ் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும். அதேபோல் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பத் தலைவர்களின் விபத்து மரணத்திற்கு ரூ. 4 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

அத்துடன் தமிழ் மொழியை மேம்படுத்த, கனடாவின் டொரோண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்திட உதவித்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது போன்ற பல நல திட்டங்களை தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தனது உரையில் அறிவித்து சாமானிய மக்களை மகிழ்வித்துள்ளார்.

Next Story

- Advertisement -