விபத்து, காதல் முறிவு பிரச்சனையிலிருந்து மீண்ட நடிகர்.. புது அவதாரம்

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெய். இவர் நடிப்பில் வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் இவருக்கென ஒரு இடத்தை கொடுத்தது. இந்த படத்தை தொடர்ந்து எங்கேயும் எப்போதும், சென்னை-28, கோவா போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

ஆரம்பத்தில் அவர் படங்களுக்கு கிடைத்த வரவேற்பு போகப் போக குறைந்தது. அவர் தேர்ந்தெடுத்த திரைக்கதையும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். ஜெய் கடந்த ஒரு வருடமாக எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. கார் விபத்து, காதல் முறிவு போன்ற பிரச்சனைகளால் அதிக மன உளைச்சலில் இவர் இருந்துள்ளார்.

எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடித்த போது நடிகை அஞ்சலியை அவர் காதலித்து வந்தார். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் காதல் முறிவு ஏற்பட்டது. ஜெய் அதிகமாக குடிப்பது தான் அஞ்சலியின் பிரிவுக்கு காரணமாக சொல்லப்பட்டது.

அதன் பிறகு ஒருவாறு பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்த ஜெய் தற்போது வரிசையாக தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதில் அவர் நடித்துள்ள எண்ணித் துணிக திரைப்படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

இதில் ஜெய்யுடன் இணைந்து வம்சி கிருஷ்ணா, அதுல்யா ரவி, அஞ்சலி நாயர் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வெற்றிச்செல்வன் இயக்கும் இப்படத்தை சுரேஷ் சுப்ரமணியன் தயாரித்துள்ளார். ஒரு ஆண்டுகளுக்குப் பிறகு ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

நடிகர் ஜெய் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் மாறியுள்ளார். ஜெய்யின் நடிப்பில் உருவாகிவரும் சிவ சிவ என்ற திரைப்படத்திற்குதான் ஜெய் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தில் ஒரு பாடலையும் இவர் பாடியுள்ளார்.

நடிகர் ஜெய் இசையமைப்பாளர் தேவாவின் அண்ணன் மகன் ஆவார். இசையில் அதிக ஈடுபாடு கொண்ட ஜெய் எதிர்பாராதவிதமாக நடிகரானார். இருப்பினும் இசையமைப்பாளராக வேண்டும் என்பது இவரின் மிகப்பெரிய லட்சியம் ஆகும். அந்த வகையில் ஜெய் தற்போது இசையமைப்பாளராக புது அவதாரம் எடுத்துள்ளார்.

Next Story

- Advertisement -