வெள்ளியங்கிரி சுயம்பு லிங்கத்தை தரிசிக்க குவியும் பக்தர்கள்.. 9 பேர் உயிரிழப்பு, என்ன செய்யணும் செய்யக்கூடாது தெரிஞ்சுக்கோங்க

Velliangiri hills: கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் இருக்கிறது. அதன் ஏழாவது மலையில் சுயம்புலிங்கமாக இருக்கும் ஆண்டவரை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

பொதுவாக பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை அங்கு பக்தர்கள் வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதற்காகவே காத்திருப்பார்கள் சாகசத்தை விரும்பும் இளைஞர்கள்.

அதேபோல் கடும் விரதம் இருந்து மலையேறும் பக்தர்களும் உண்டு. ஆனால் ஏழு மலைகளை கடந்து ஆண்டவரே தரிசிப்பது அவ்வளவு எளிது கிடையாது.

சவால் நிறைந்த வெள்ளையங்கிரி மலை

அதிலும் இந்த வருடம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இந்த மலையில் ஏறிய புண்ணியகோடி என்பவர் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இதற்கு முன்பாக சுப்பாராவ், தியாகராஜன், பாண்டியன் என எட்டு பேர் மலையேறும் போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளனர். இதற்கான காரணம் என்ன? மலை ஏறும் போது என்ன செய்யணும்? செய்யக்கூடாது என்பதை இங்கு காண்போம்.

மலை ஏறும் முன் செய்ய வேண்டியது

இந்த மலை ஏறுவதற்கு முன்பு நம் உடல் நிலையை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இதய நோய், பிபி, சுகர், ஆஸ்துமா, மூச்சு திணறல் பிரச்சனை இருப்பவர்கள் இந்த பயணத்தை தவிர்ப்பது நல்லது.

அதேபோல் மலையேறும் முன்பு தேவையான அளவு தண்ணீர், சாப்பிடுவதற்கு இலகுவான பிஸ்கட், பழங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். அதே போல் மலை ஏறும் போது குளிர் அதிகமாக இருக்கும்.

அதற்கு ஏற்ற ஆடை அணிந்திருப்பது நல்லது. அதேபோல் சிலருக்கு வாந்தி வருவது போன்ற உணர்வும் ஏற்படலாம். அதற்கேற்ற வகையில் புளிப்பான மிட்டாய்களை கையில் வைத்துக் கொள்வது பயனளிக்கும்.

மலையேறும் பாதை

இப்போது ஏழு மலைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம் முதல் மலை செங்குத்தாக இருக்கும். இதில் ஏறுவது ரொம்பவே சிரமமாக இருக்கும். இரண்டாவது மலையில் சுனை நீர் கிடைக்கும்.

அந்தப் புத்துணர்ச்சியோடு அதை கடக்கும் போது வழுக்குப் பாறை ஒன்று வரும். இதை கடந்து சென்றால் கைதட்டி சுனை என்று அழைக்கப்படும் மூன்றாவது மலை வரும்.

இங்கு சித்தர்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக நம்பப்படுகிறது. இதை அடுத்து நான்காவது மலை சமதளமாக இருக்கும். இங்கு நாம் சிறிது நேரம் ஆசுவாசப்படுத்தி கொண்டு பயணத்தை தொடரலாம்.

அடுத்ததாக ஐந்தாவது மற்றும் ஆறாவது மலை ஒன்றோடு ஒன்று ஒட்டி இருப்பது போல் இருக்கும். அதன்படி ஐந்தாவது மலை ஏற்றம் நிறைந்ததாகவும் ஆறாவது மலை இறக்கம் நிறைந்ததாகவும் இருக்கும்.

இதற்கு அடுத்து எழாவது மலை தான் பெரும் சவாலாக இருக்கும். முதல் மழை ஏறும் போது இருந்த சிரமத்தை விட அதிகமாக இருக்கும். இதை வெற்றிகரமாக கடந்து விட்டால் சுயம்பு லிங்கத்தை மனதார வழிபடலாம்.

இப்படியாக இந்த வெள்ளியங்கிரி பயணம் பல சவால்கள் நிறைந்ததாக இருக்கும். ஆனால் சோசியல் மீடியாக்களில் இது மிகவும் சுலபம் என்று சிலர் கூறலாம்.

அதை மட்டும் பார்த்துவிட்டு முன்னேற்பாடு இல்லாமல் செல்லக்கூடாது. உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொண்டு தான் செல்ல வேண்டும்.

Next Story

- Advertisement -