கருணாஸிடம் பறிமுதல் செய்யப்பட்ட 40 குண்டுகள்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

Karunas: காமெடி நடிகராக வந்த கருணாஸ் இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியின் தலைவராகவும் உள்ளார்.

இன்று அவர் சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்காக விமான நிலையம் வந்திருந்தார். அங்கு அவரை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவருடைய கைப்பையில் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் கருணாசை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் அவர், தான் முறையான அனுமதி பெற்று கைதுப்பாக்கி வைத்திருப்பதாக கூறி இருக்கிறார்.

கருணாசிடம் இருந்த துப்பாக்கி குண்டுகள்

அதில் போடுவதற்காக வைத்திருந்த குண்டுகள் தான் இது என்றும் அவசரமாக விமான நிலையத்திற்கு வந்தபோது கைப்பையில் இது இருந்ததை கவனிக்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.

ஆனால் விமானத்தில் இது போன்ற வெடிப்பொருட்களை எடுத்துச் செல்வதற்கு அனுமதி கிடையாது. அதனால் கருணாசை அதிகாரிகள் விமானத்தில் ஏறுவதற்கு அனுமதிக்கவில்லை.

அதை அடுத்து தன் துப்பாக்கியின் லைசன்ஸ் புதுப்பித்த விவரங்களை காண்பிக்க கருணாஸ் மேலும் சில விளக்கங்களை கூறியிருக்கிறார். அதை தொடர்ந்து அவருடைய திருச்சி பயணம் ரத்து செய்யப்பட்டது.

இதன் காரணமாக சென்னை விமான நிலையம் சில மணி நேரங்கள் மிகுந்த பரபரப்பாக மாறியிருக்கிறது. அது மட்டுமின்றி கருணாஸ் செல்ல இருந்த அந்த விமானமும் அரை மணி நேரம் தாமதமாக கிளம்பியது.

Next Story

- Advertisement -