முதல் படத்திலேயே இவ்வளவு சாதனைகளா.. விக்ரமனை தூக்கி வைத்து கொண்டாடிய இளசுகள்

குடும்பப்பாங்கான கதைகளை எடுப்பதில் வல்லவர் இயக்குனர் விக்ரமன். இவருடைய இயக்கத்தில் இசை, சென்டிமென்ட் என அனைத்திலும் ரசிகர்களை உருக வைத்த படம் புது வசந்தம். விக்கிரமனை போல் புது வசந்தம் படத்தை தயாரித்த ஆர்பி சௌத்ரிக்கும் இது முதல் படம்.

தயாரிப்பாளரிடம் விக்ரமன் கதை சொல்லும் பொழுது பத்து நிமிடம் மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் என ஆர்பி சவுத்ரி சொல்லி உள்ளார். ஆனால் அழ வேண்டிய இடத்தில் அழுது, சிரிக்க வேண்டிய இடத்தில் சிரித்து, பாட வேண்டிய இடத்தில் பாடி, காமெடி செய்ய வேண்டிய இடத்தில் காமெடி செய்து இதுவரை இந்த அளவுக்கு யாரும் கதை சொல்ல முடியாத அளவிற்கு கதையை சொல்லி முடித்துள்ளார் விக்ரமன்.

பத்து நிமிடம் மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்ன ஆர்பி சவுத்ரி ஒன்றரை மணி நேரமாக கொஞ்சமும் சோர்வில்லாமல் விக்ரமனின் கதையை கேட்டு முடித்தார். உடனே புது வசந்தம் படத்திற்கு ஓகே சொல்லிவிட்டார் தயாரிப்பாளர். இப்படத்திற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் 23 லட்சம். ஆனால் 22 லட்சத்து 50 ஆயிரத்துலேயே படத்தை முடித்துவிட்டார் இயக்குனர்.

புது வசந்தம் படத்தில் கௌரி கதாபாத்திரத்தில் முதலில் ரேவதி நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக சித்தாரா நடித்திருந்தார். முரளி, ஆனந்த் பாபு, ராஜா, சார்லி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

புதிய இயக்குனர், புதிய தயாரிப்பாளர் என பல எதிர்பார்ப்புகளுடன் புது வசந்தம் படம் 1990 ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் புது வசந்தம் படம் ஈர்த்தது. அதுமட்டுமல்லாமல் 175 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. புது வசந்தம் படத்திற்கு எஸ் ஏ ராஜ்குமார் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற ஒன்பது பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. அதில் பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவியது.

புது வசந்தம் படம் சிறந்த இளைஞர்களுக்கான படம் என்று இந்தியா டுடே  பாராட்டி இருந்து. அதுமட்டுமல்லாமல் புது வசந்தம் படம் ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்றது. தற்போதும் தொலைக்காட்சிகளில் புதுவசந்தம் படம் ஒளிபரப்பு செய்யப்பட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்