Tamil Cinema News | சினிமா செய்திகள்
மேடையில் வைத்து நடிகையிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர்
தொட்ரா படத்தின் இயக்குனர் மதுராஜ் பொது மேடையில் வைத்து நடிகையிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
பிரபல இயக்குனர் பாக்யராஜிடம் சினிமா கற்றவர் மதுராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘தொட்ரா’. நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்வி ராஜன் ஹீரோவாகவும் மலையாள நடிகை வீணா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இயக்குனர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன், கூல் சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு ஆகிய முக்கிய இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பாக்கியராஜ், என் உதவி இயக்குனர் என்பதற்காகவே படம் கொடுத்ததாக தயாரிப்பாளர் கூறினார். அதற்காகவே, எந்தவித பிரச்சனையும் செய்யாமல் படத்தை முடித்து கொடுத்து என் பெயரைக் காப்பாற்றிவிட்டார் மதுராஜ் என பாராட்டினார்.
இதை தொடர்ந்து, மேடையேறிய இயக்குனர் மதுராஜ், இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என் குருநாதர் பாக்யராஜ் சார், ‘என் பெயரைக் காப்பாற்றிவிட்டாய்’ எனக் கூறினார். இதைவிட, எனக்கு பெரிய விருது வேறு எதுவும் இருக்க முடியாது. இப்படப்பிடிப்பில், கதாநாயகி வீணாவை பலமுறை கோபத்தில் அடித்துவிட்டேன். பலபேரிடம் சைக்கோ மாறி நடந்து கொண்டு இருக்கிறேன். இந்த சந்தர்ப்பத்தில் என் கதாநாயகியிடமும், சம்பந்தப்பட்டவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.
