அரசியல் நெருக்கடியில் சிக்கி வெளிவந்த 7 தமிழ் திரைப்படங்கள் இவைதான்.!

ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு பின்னர் மீண்டும் இந்தியாவையே தமிழகம் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது மெர்சல் திரைப்படம். மத்திய அரசின் திட்டங்களை விமர்சித்ததால் தற்போது அந்த படத்திற்கு ஏகத்திற்கும் நெருக்கடி கொடுத்து வந்தனர் பாஜகவினர். மெர்சல் படம் போன்று தமிழகத்தில் அரசியல், மதம் மற்றும் ஜாதிய நெருக்கடிகளை சந்தித்த சில முக்கிய படங்கள் குறித்த சிறிய தொகுப்பு.

குற்றப்பத்திரிகை (1991) தமிழ் திரை உலகில் இந்த படத்தை போல் வேறு எந்த படமும் அந்த அளவு இன்னலுக்கு ஆளாகி இருக்காது. ராம்கி, ரஹ்மான், ரோஜா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்த இந்த படத்தை ஆர்.கே செல்வமணி இயக்கி இருந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை மற்றும் இலங்கை போர் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இதன் கதைக்களம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படம் சென்சார் போர்டினால் சுமார் 15 ஆண்டு காலம் கிடப்பில் போடப்பட்டது. 2006-ஆம் வழங்கப்பட்ட சென்னை நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டு 2007-ஆம் ஆண்டு வெளியானது.

kuttrapathirikai
kuttrapathirikai

பராசக்தி (1952) திமுக தலைவர் கருணாநிதி திரைக்கதை எழுத, கிருஷ்ணன் மற்றும் பஞ்சுவின் இயக்கத்தில் சிவாஜி கணேசன், எஸ்.எஸ் ராஜேந்திரன், பண்டரி பாய் ஆகியோர் நடிப்பில் 1952-ஆம் ஆண்டு இப்படம் தீபாவளி தினத்தில் வெளியானது. இந்த படத்தில் இந்துக்கள் மற்றும் பார்ப்பனர்கள் குறித்து தவறான முறையில் சித்தரித்து இருப்பதாக கூறி இதனை தடை செய்ய வலியுறுத்தப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் இதற்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால் அப்போதைய முதல்வர் ராஜாகோபாலச்சாரி அதற்கு மறுப்பு தெரிவித்து, படத்தை வெளியிட அனுமதி வழங்கினார்.

parasakthi
parasakthi

ஒரே ஒரு கிராமத்திலே (1989) லட்சுமி, நிழல்கள் ரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஜோதி பாண்டியன் இந்த படத்தை இயக்கி இருந்தார். சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இந்த படத்தில் இருந்ததால் இப்படமானது தடை செய்யப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்றம் அந்த தடையை நீக்கியது.

ore oru gramathiley
ore oru gramathiley

இருவர் (1997) இயக்குனர் மணிரத்னத்தின் படைப்புகளில் மிக முக்கியமான ஒன்று இத்திரைப்படம். மோகன்லால், பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய், கவுதமி, தபு என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது. தமிழ் திரை உலகம் மற்றும் அரசியலில் தனக்கென நீங்கா இடம் பிடித்த 3 முக்கிய தலைவர்களான எம்.ஜி.ஆர்., கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. 1996-ஆம் ஆண்டு சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்ட இந்த படத்திற்கு சான்றிதழ் வழங்க சென்சார் போர்டு மறுத்து விட்டது. தயாரிப்பாளரின் தொடர் முயற்சியால் 8 பேர் கொண்ட கமிட்டிக்கு இந்த படம் மாற்றப்பட்டது. படத்தை பார்த்த அவர்கள் சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்க கூறியுள்ளனர். மேலும் படத்தில் இடம் பெற்ற 4 வசனங்களையும் நீக்கி உள்ளனர். படம் வெளியான பின்னரும் தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் தான் இருந்தன. இந்த படத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும் என கூட கூறப்பட்டது.

iruvar
iruvar

டேம் 999 (2011) சோஹன் ராய் இயக்கத்தில் உருவான இந்த படம் முல்லைப்பெரியாறு பிரச்னையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படம் வெளியாக இருந்த நேரத்தில் தமிழ் நாடு மற்றும் கேரளா இடையே முல்லைப்பெரியாறு குறித்த பிரச்னை உச்ச கட்டத்தில் இருந்தது. இதையடுத்து அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டதன் பேரில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதித்தார். இதனை எதிர்த்து இயக்குனர் சோஹன் ராய் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு 2013-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

dam999
dam999

விஸ்வரூபம் (2013) நடிகர் கமல்ஹாசன் இயக்கி, நடித்திருந்த படம் விஸ்வரூபம். 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக இருந்த படம் இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக தள்ளிப்போனது. இந்த படத்தில் இஸ்லாமியர்கள் அனைவரையும் தீவிரவாதிகள் போல் சித்தரித்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு ஐபிசி பிரிவு 144-ன் கீழ் தடை விதிக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி மாதம் தடை விலக்கி கொள்ளப்பட்டது. இந்தியா மட்டும் இன்றி இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளிலும் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டு பின்னர் அது விலக்கி கொள்ளப்பட்டது.

vishwaroopam
vishwaroopam

இனம் (2013) சந்தோஷ் சிவன் இயக்கத்தில் 2013-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த படம் 2014-ஆம் ஆண்டு தான் தமிழகத்தில் ரிலீசானது. இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகளுக்குமான போரை மையப்படுத்தி இந்த படமானது எடுக்கப்பட்டது. இந்த படத்தில் விடுதலை புலிகளை தவறாக சித்தரித்து இருப்பதாகவும், சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்த படம் இருப்பதாகவும் கூறப்பட்டது. திராவிடர் கழகம் மற்றும் மதிமுகவின் போராட்டம் காரணமாக இந்த படம் வெளியான 3-வது நாளே அனைத்து திரை அரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்பட்டது.

inam
inam
Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய செய்திகள்