பணத்திற்காக ஆடுபுலி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கும் தளபதி.. பக்கா அரசியல்வாதியாக மாறிய விஜய்

Actor Vijay: நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வு குறித்து மொத்த தமிழகமும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா விஜய் மக்கள் இயக்கத்தால் இன்று நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் தளபதி விஜய் சிறப்புரையாற்ற இருக்கிறார்.

ஒரு பக்கம் இந்த விழாவுக்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், நேற்று விஜய் நடித்த லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அவரின் பிறந்தநாள் அன்று ரிலீஸ் ஆகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டருடன் வெளியானது. இந்த போஸ்டர் அவருடைய ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்தாலும், கடுமையான விமர்சனங்களையும் பெற்றிருக்கிறது.

நேற்று வெளியான போஸ்டரில் தளபதி விஜய் கையில் சிகரெட் உடன் இருப்பது போல் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையான கண்டனம் தெரிவித்ததோடு, விஜய் இப்படி நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், சமூக அக்கறையுடன் இனிமேல் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லியிருந்தார். அவருடைய அந்த ட்வீட்டிற்கு பிறகு இந்த பிரச்சனை இன்னும் அதிகமாக பேசப்பட்டது.

அரசியலின் முதல் படியை எடுத்து வைக்கும் நேரத்தில் இப்படி ஒரு விமர்சனம் எழுந்திருப்பதால், அதை சமாளிப்பதற்காக இன்று நடக்கும் கல்வி விருது வழங்கும் விழாவில் புகையிலை, சிகரெட், பிடி, ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் போன்றவைகளுக்கு அனுமதி கிடையாது என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதை தளபதி ரசிகர்கள் அன்புமணிக்கு சொல்லும் பதிலாக இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

எப்படி பார்த்தாலும் இந்த விழாவிற்கு வருபவர்களை விட, விஜய்யின் படத்தை பார்ப்பவர்கள் அதிகம். நேற்று இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரல் ஆகியது. அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் தளபதி விஜய் அவருடைய ரசிகர்களுக்கு புகைபிடிப்பது தவறு இல்லை என்று சொல்வது போலவும், அதை ஊக்கப்படுத்துவது போலவும் நடித்திருப்பது ரொம்பவும் தவறான ஒரு விஷயம் தான்.

தியேட்டரில் மாஸ் மற்றும் கிளாஸ் காட்டினால் தான் படம் ஓடும், படம் ஓடினால் தான் அடுத்தடுத்து சம்பளத்தையும் உயர்த்த முடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஒரு பக்கம் பணத்திற்காக இப்படியெல்லாம் செய்துவிட்டு, மறுபக்கம் சமூக சேவை செய்து அதன் மூலம் அரசியலில் இறங்கிவிடலாம் என்று ஆடுபுலி ஆட்டம் ஆடி வருகிறார் தளபதி விஜய். அரசியலுக்கு வருவதற்கு முன்பே உள்ளே உள்ள நுணுக்கங்களை கற்று தெரிந்து விட்டது போல் தெரிகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →