Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவின் சம்மர் கலெக்ஷன் நிலவரம் தெரியுமா? சோகத்தில் திரையுலகம்

தமிழ் சினிமாவின் சம்மர் கலெக்ஷன் நிலவரம் தெரியுமா?… சோகத்தில் திரையுலகம்
தமிழ் சினிமாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த சம்மரில் வெளியான படங்களில் இரண்டு படங்களைத் தவிர மற்ற படங்கள் பெரிய அளவில் வசூல் ஈட்டவில்லை.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் கோடைவிடுமுறை காலமான ஏப்ரல் – மே மாதங்கள் அதிக அளவில் படங்களை ரிலீஸ் செய்து பெரிய லாபத்தை எட்டுவது வாடிக்கையான ஒன்று. ஆனால், இந்த சம்மரில் வெளியான பெரும்பாலான படங்கள் தயாரிப்பாளரின் முதலீட்டைக் கூட திரும்ப எடுக்கவில்லை என்பதுதான் வேதனையான உண்மை.
தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம், கியூப் நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தைக் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இதனால், மார்ச் – ஏப்ரல் மாதங்களில் படங்கள் வெளியாகவில்லை. புதிய படங்களை வெளியிடப்போவதில்லை என தயாரிப்பாளர்கள் அறிவிக்கவே, அந்த போராட்டத்துக்கு திரையரங்கு உரிமையாளர்கள் உடன்படவில்லை.
சினிமாத் துறை ஸ்டிரைக் காலகட்டத்தில் மற்ற மொழிப் படங்கள், ஏற்கனவே வெளியான படங்களை அவர்கள் திரையிட்டு வந்தனர். தயாரிப்பாளர்கள் இறங்கி வராத நிலையில், நாங்களும் ஸ்டிரைக் பண்ணுவோம் என அறிவித்து தியேட்டர் உரிமையாளர்கள், திரையரங்குகளை மூடினர். ஆனால், ஸ்டிரைக் தொடங்கி ஒரு வாரத்தில் அரசு தலையிட்டதால், தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் தயாரிப்பாளர்கள் மற்றும் கியூப் நிறுவன அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் தமிழ் திரைப்படங்கள் வெளியாகத் தொடங்கின.
முதல் படமாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருந்த மெர்க்குரி படம் ரிலீஸானது. வசனங்களே இல்லாத படமாக வெளிவந்த மெர்க்குரி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 27, மே 4, மே 11, மே 18, மே 25 ஆகிய தேதிகளில் தியா, இரும்புத் திரை, பக்கா, இரவுக்கு ஆயிரம் கண்கண், இருட்டு அறையில் முரட்டு குத்து, காளி, ஒரு குப்பைக் கதை, அபியும் அனுவும் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸாகின. இவற்றில் இரும்புத் திரை மட்டுமே சூப்பர் ஹிட் அடித்தது. அறிமுக இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் விஷாக் நடித்துத் தயாரித்திருந்த அந்த படம் தமிழகத்தில் மட்டுமல்லாது, ஆந்திராவிலும் அபிமன்யடு என்கிற பெயரில் கல்லா கட்டியது.

Oru Kuppai Kathai
அதேபோல், இருட்டு அறையில் முரட்டு குத்து படமும் பல நாட்கள் ஹவுஸ் ஃபுல்லாக ஓடி தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தைப் பெற்றுத் தந்தது. ஆனால், விமர்சகர்கள் அந்த படம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இதற்கு அடுத்தபடியாக ஓரளவு நல்ல வசூலைப் பெற்ற படம் அருள்நிதி நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் படம். ஆனால், விஜய் ஆண்டனி நடித்த காளி, ஜி.வி.பிரகாஷின் செம உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்கள் தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டத்தையே பரிசாக அளித்தன. தமிழ் சினிமாவில் கடந்த ஏப்ரல் – மே மாதங்களில் வெளியான படங்களில் இரும்புத் திரை மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய 2 படங்களைத் தவிர மற்ற படங்களுக்கு ரசிகர்கள் போதுமான வரவேற்பை அளிக்கவில்லை. இதனால், தயாரிப்பாளர்களுக்குக் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதேநேரம், கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜுன் 7ம் தேதி வெளியான ரஜியின் காலா படம் விமர்சனரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வெற்றியைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
