இலங்கையில் ராஜபக்சே எப்படி வீழ்ந்தார்.? இப்போது ஒரு பிரபாகரன் உருவாகினால் எப்படி இருக்கும்?

வணக்கம் நண்பர்களே! சமீபமாக நாம் செய்திகளில் அதிகமாக பார்க்கும் உலக செய்திகள் இரண்டு. ஒன்று ரஷ்யா – உக்ரைன் போர். மற்றொன்று இலங்கையின் கையறு நிலை. இலங்கையின் இந்த நிலைக்கு என்ன காரணம்? ஏன் இப்படி ஒரு நிலைக்கு அந்நாடு தள்ளப்பட்டது? நேர்மையுடன் ஒரு அலசல் செய்யலாம் வாங்க!

இலங்கையின் இந்த நிலைமையை பற்றி நாம் அறியவேண்டுமானால் முதலில் நாம் இலங்கையை பற்றி சில புரிதல்கள் கொள்ள வேண்டும். அந்த நாட்டை கட்டமைப்பது எது என்று தெரியவேண்டும். அப்போது தான் அதன் இன்றைய நிலையை நாம் உணர இயலும். நாம் நமது தமிழ் மீது கொண்ட காதல், அவர்கள் தமிழ் இனத்திற்கு செய்த துரோகம் போன்றவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு இப்போது சில விவரங்களைஆராய்ந்து பார்க்கலாம்.

இலங்கை ஓர் தீவு நாடு. பரப்பளவில் மிகவும் சிறிய நாடு. சொல்லப்போனால் இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழகத்தில் முக்கால்வாசி தான் இருக்கும் நாடு. எந்தவொரு நாடும் சாதாரணமாக தன்னிறைவு பெற இயலாது. காரணம் சில இயற்கை பொருட்கள் சில நிலப்பரப்புக்குள் மட்டுமே கிடைக்கும். அப்படி இருக்கும் போது அவற்றை ஒரு நாடு இறக்குமதி செய்து தான் ஆகவேண்டும். உதாரணத்திற்கு நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்றவற்றை கூறலாம். அதற்கு ஈடாக அந்நாடு எவ்வளவு ஏற்றுமதி செய்கிறது என்பதே அந்த நாட்டின் பொருளாதாரத்தை சமநிலையில் வைத்திருக்க உதவும். இந்த விதிக்கு இலங்கை மட்டும் என்ன விதிவிலக்கா?

இலங்கையின் பொருளாதாரம், உடைகள் தயாரிப்பு, மின்பொருட்கள் தயாரிப்பு, டீ ஏற்றுமதி, சுற்றுலாத்துறை வருமானம் போன்றவற்றால் மட்டுமேநின்றது. அந்த வகையில் இலங்கையின் வீழ்ச்சி 2005-க்கு முன்னர் இருந்தே தொடங்கிவிட்டது என்பது தான் உண்மை. 2000-ஆம் ஆண்டு அந்நாட்டின் கடன் சுமை 9.2 பில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் 69000 கோடி) இருந்தது. அதுவே 2015ஆம் ஆண்டு 49.3 பில்லியன் டாலராக அசுர வளர்ச்சி பெற்றது. தற்போது (2022ல்) 56.3 பில்லியன் டாலராக வளர்ந்து நிற்கிறது. இந்திய மதிப்பில் 4,25000 கோடி ரூபாய். யம்மாடியோவ்!!!

இப்படி ஒரு மாபெரும் கடன் சுமை உயர்ந்து வந்ததை எந்தவொரு இலங்கை பொருளாதார நிபுணரும் கவனிக்க வில்லையா? அல்லது அதெல்லாம் அலட்சியப்படுத்தப்பட்டதா? என்பது தெரியவில்லை. ஆனால் மாபெரும் இந்த சொதப்பல் இன்று இலங்கை அரசை, ராஜபக்சே ஆட்சியை மொத்தமாக கவிழ்க்க போகும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த பாதிப்பை தாமதமாக உணர்ந்த பின்னரே சீனாவிடம் மீண்டும் கையேந்தும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. அதன் காரணமாகவே சீன அரசின் சொல்லுக்கு கட்டுப்பட்டு ராஜபக்சே அரசு கைகட்டி நின்றது. தமிழில் இருந்த பெயர்களை நீக்கி சீன மொழியில் பெயர்ப்பலகை எழுதும் அளவுக்கு தாழ்ந்த நிலைக்கு சென்றது.

2005ஆம் ஆண்டு கடன் சுமை ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்தது. ஆனால் காலப்போக்கில் இது உயர ஆரமித்தது. மேலும் இலங்கை அரசு – விடுதலைப்புலிகள் போர் நடைபெறப்போவதை கணித்த பல தொழில் நிறுவனங்கள், தங்கள் ஜாகையை இந்தியாவிற்கும், வங்காளதேசத்துக்கும் மாற்றியது. அப்படிதான் பல ஆடை தொழில் நிறுவனங்கள் வங்காளதேசம் சென்றது. இன்று வங்காளதேசம் அத்துறையில் இந்தியாவிற்கு பலத்த போட்டியாய் இருப்பது வேறுகதை.

போர் தொடங்கிய பிறகு, அவர்களது கஜானா காலியானது. மிகப்பெரும் வல்லரசு நாடுகளே போரினால் கடனுக்கு தள்ளப்படும்போது மிகச்சிறிய நாடான இலங்கை பொருளாதாரம் பற்றி கவலைப்படாமல் போரில் ஈடுபட்டது. விடுதலைப்புலிகளை வெற்றிபெற்றதை மட்டுமே சாதனை என்று தம்பட்டம் அடித்துக்கொண்ட இலங்கை, அதன் பொருளாதாரம் வீழ்வதை மக்களிடம் தெரிவிக்கவில்லை. டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதை தடுக்க ஏற்றுமதியை பெருக்க இயலவில்லை. அதற்கான வளங்களும் இலங்கையில் இல்லை. இது போக இலங்கை அரசு எடுத்த பல தவறான கொள்கைகளால் அந்த நாட்டு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டது.

ராஜபக்சே அரசு ரசாயன வேளாண் உரங்களை உபயோகிக்க தடைவிதித்தது. இயற்கை வேளாண்மை முறையை அதிகப்படுத்துகிறேன் என்று எண்ணி அதிவிரைவில் விவசாயிகளை இயற்கை முறைக்கு மாற நிர்பந்தித்தது. அதனால் வேளாண் உற்பத்தி மிகவும் மந்தமான நிலைக்கு சென்றது. இதன் காரணமாகவே அதன் உள்நாட்டு தேவைக்கு உணவுப்பொருட்களை அதிகம் இறக்குமதி செய்யத்தொடங்கியது. அதற்கு சீனா பெரும் உதவியது. ஆனால் அதில் உள்நோக்கம் இருப்பது அவர்களுக்கு தெரியவில்லை. இதனால் இலங்கையின் மொத்த கடன் சுமையில் சீனாவின் பங்கு மட்டுமே 10% அளவுக்கு உயர்ந்தது. அதே நேரம் இந்தியாவின் பங்கு 2%.

இலங்கை அரசின் இந்த நிலைக்கு மேலும் ஒரு காரணமாக சொல்லப்படுவது இரண்டு ஆண்டுகளாக உலகையே ஆட்டிப் படைத்துக்கொண்டு இருக்கும் கொரோனா நோய்த்தொற்று. ஆம், இந்த நோய்த்தொற்றின் பரவல் காரணமாக பல நாடுகளில் விமானசேவைக்கு தடை விதிக்கப்பட்டது. அதன் காரணமாக சுற்றுலாத்துறை உலகம் முழுக்கவே முடங்கியது. நாட்டின் 10% வருமானத்தை வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் வருகையை நம்பி இருக்கும் இலங்கை அரசுக்கு இது பேரிடியாக அமைந்தது.

இலங்கையின் இந்த தொடர் பின்னடைவுகளால் உஷாரான சில உணவுப்பொருள் கையகப்படுத்துவோர் பொருட்களை முடக்க ஆரமித்தனர். அது விலைவாசியை நேரடியாக பாதித்தது. தொடர்ந்து வீழ்ந்த இலங்கை ரூபாயின் மதிப்பு, கச்சா என்னை போன்ற அத்தியாவசிய பொருட்களை அதிக பணம் கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய ரூபாயின் மதிப்பிற்கு 2 ரூபாயாக இருந்த இலங்கை ரூபாய், இன்று 4 ரூபாய்க்கு அருகில் நிற்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் சீக்கிரம் உணவுப் பற்றாக்குறையால் அந்த நாடு பெரும் இன்னல்களுக்கும், போராட்டங்களுக்கும் ஆளாகும். மிக விரைவில் அரசு வீழும்.

ஆனாலும் அந்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த எந்தவொரு வழியும் உடனடியாக தென்படவில்லை என்பதேநிதர்சனம். ஒருவேளை ஏதேனும் ஓர் நாடு, கடன் வழங்கி காப்பாற்ற எண்ணினாலும் அதில் உள்நோக்கம் நிச்சயம் இருக்கும். அதற்கும் முன்னர், கடன் கொடுத்திருக்கும் நாடுகளுக்கு என்ன பதில் சொல்வது என்பதை முடிவு செய்துகொள்ளட்டும் ராஜபக்சே அரசு!!

இலங்கை அரசின் நீண்ட வருட போராட்டத்திற்குப் பின் பிரபாகரன் சூழ்ச்சியால் கொல்லப்பட்டார். அதற்குப்பின் LTTE என்ற அமைப்பு இருக்கிறதா என்பது போன்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் தற்போது இலங்கை இருக்கும் சூழ்நிலையில் பிரபாகரன் போல் ஒரு வீரன், ஒரு தலைவன் வெளிவந்தால் கண்டிப்பாக நாட்டை காப்பாற்றலாம் என்பதே சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்