
இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சல்மான்கான். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார்.
மும்பையில் வசித்து வரும் இவருக்கு ராய்காட் மாவட்டம், பன்வெல் அருகே சொந்தமாக பண்ணை வீடு ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் சல்மான் கான் அவரது பண்ணை வீட்டுக்கு சென்றிருந்தார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக பண்ணை வீட்டில் இவரை பாம்பு ஒன்று கடித்தது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விஷ முறிவு மருந்து கொடுத்து தீவிர சிகிச்சை அளித்தனர்.
மேலும் விஷமில்லாத பாம்பு தான் சல்மான்கானை கடித்துள்ளது என்றும், அவருக்கு பெரிய ஆபத்து எதுவும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவர்கள் இவ்வாறு சொல்லியதை கேட்டவுடன் தான் அவரது ரசிகர்கள் மட்டும் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.இதையடுத்து அவர் சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் பண்ணை வீட்டிற்கு சென்றார்.
ஊரடங்கு காலத்தில் சல்மான்கான் தன்னுடைய பொழுதை பண்ணை வீட்டில் தான் கழித்து வந்தார். அங்கு அவர் தோட்ட வேலைகள் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி வந்தன.

இந்நிலையில் அவருக்கு பாம்பு கடித்த இந்த செய்தியால் இந்தி திரையுலகினர் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் சல்மான் கான் இன்று தனது 56வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர்.