உதவி கேட்டு சென்ற எம்ஆர் ராதாவுக்கு ஆரஞ்சு பழம் கொடுத்தனுப்பிய நடிகர்.. உண்மையான காரணத்தை சொன்ன ராதாரவி

தமிழ் சினிமாவை தன்னுடைய வித்தியாசமான வில்லத்தனத்தால் ஆண்டவர்தான் எம் ஆர் ராதா. இவருடைய சிறந்த நடிப்பினால் ரசிகர்கள் இவரை நடிகவேள் என்று அழைத்தனர். ராதா சினிமாவில் பணத்திற்காக நடித்தாலும் அதிலும் தன்னுடைய பகுத்தறிவு கருத்துக்கள் மற்றும் அரசியலை பற்றி பேசாமல் இவர் இருந்ததே இல்லை. பகுத்தறிவு கருத்துக்களை சிரிப்புடன், சிந்தனை செய்யுமாறு எடுத்துச் சொல்லக்கூடிய நடிகர் இவர்.

அந்த காலத்தில் எம் ஆர் ராதாவுடன் ஒரு காட்சி என்றால் மிகச்சிறந்த நடிகர், நடிகைகளே பயப்படுவார்களாம். அந்த அளவுக்கு தன்னுடைய எக்ஸ்பிரஷனால் ஸ்கோர் செய்து விடுவாராம் இவர். மேலும் அரசியலைப் பொறுத்த வரைக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சக நடிகர்களிடம் அதை எந்த நேரத்திலும் இவர் காட்டியதே இல்லை. அனைவரிடமும் நட்புடன் பழகும் பண்புடையவர்.

எம் ஆர் ராதாவின் திரை வாரிசுகளாக இருப்பவர்கள் தான் நடிகர் ராதாரவி மற்றும் நடிகை ராதிகா. இவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களுடைய தந்தையைப் பற்றி பல சுவாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்து கொள்வார்கள். அப்படி சமீபத்தில் ராதாரவி தன் அப்பாவான எம் ஆர் ராதாவுக்கு நடந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

ஒரு முறை எம் ஆர் ராதா தன்னுடைய மகன் வாசுவை அழைத்துக் கொண்டு கலைவாணர் வீட்டிற்கு சென்றிருந்தாராம். உண்மையில் ராதா அவர் வீட்டிற்கு சென்றதற்கு காரணம் பண உதவி பெறுவதற்கு தானாம் . கலைவாணரிடம் அவர் வாயை திறந்து பண உதவி வேண்டும் என்றும் கேட்டு இருக்கிறார். ஆனால் கலைவாணரோ அவரது கையில் ஆரஞ்சு பழத்தை கொடுத்து அனுப்பி விட்டாராம்.

இது எம் ஆர் ராதாவுக்கு மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வீட்டிற்கு வந்த ராதா ரொம்பவும் கோபமாக இருந்தாராம் . கோபத்தில் அந்த ஆரஞ்சு பழத்தை எடுத்து வீசி இருக்கிறார். ஆனால் அந்த பழத்திற்குள் பணம் வைத்து அனுப்பி இருக்கிறார் கலைவாணர். இது ராதாவிற்கு ஒரு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

கலைவாணரும், எம் ஆர் ராதாவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கருத்துக்களை உடையவர்கள் தான். கலைவாணர் தன்னுடைய பகுத்தறிவு கருத்துக்களை ஹீரோயிசத்துடன், நகைச்சுவை கலந்து மக்களுக்கு கொடுப்பார். எம் ஆர் ராதா அவருடைய சமூக கருத்துக்களை வில்லத்தனத்தோடு ஒரு நக்கலும் கலந்த படி ரசிகர்களுக்கு நெற்றியில் அடித்தது போல் புரியுமாறு சொல்லுவார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →