Tamil Cinema News | சினிமா செய்திகள்
நாச்சியார் படம் பற்றி நடிகர் சிவகுமாரின் விமர்ச்சனம்.!

பாலாவின் கைவண்ணத்தை ஒரு இடைவெளிக்குப்பின் பிரதிபலித்த படம். இவர் எடுக்கும் படங்கள் கொஞ்சம் வன்முறை கலந்ததாக இருக்கும் தற்பொழுது வன்முறைகளுடன் சேர்த்து முகம் மலர ஒரு பிஞ்சுக்காதலை காட்டிய விதம். மனிதர்களின் வாழ்வியலை தொட்டாலும் நகர சூழலில் எடுத்தது மாறுதலாக உணர வைத்தது.
ரசிகர்களின் மனதை லேசாகவும், பாரமாகவும் மாறி மாறி ஒரு நல்ல திரைக்கதையை 100 நிமிட நேரத்தில் சொன்ன பாலாவை மீண்டும் வாழ்த்தி வரவேற்போம். ஜிவி.பிரகாஷ் இனிமேல் துஷ்டப்பயல் கேரக்டர்களில் நடிக்க கூடாது. அந்தளவு அவரை ஒரு ஜென்டில்மேனாக நம்முடைய மனதில் குடியேற வைத்துவிட்டார் பாலா.
அரசியாக நடித்த அந்த இளம் தேவதையை எங்கே கண்டுபிடித்தாரோ தெரியவில்லை? அற்புதமான மொழி பேசும் கண்களும் அது காட்டும் பாவனைகளும். அடடா.நாச்சியார் என்ற போலிஸ் அதிகாரியாக நடித்த புதுமுகம் ஜோதிகாவுக்கு ரெட் கார்ப்பெட் வரவேற்பை தரவேண்டும்.
குழம்ப வேண்டாம். உண்மையாகவே ஜோதிகாவின் புதியதொரு முகத்தைதான் கண்டு பிரமித்து விட்டேன். சூப்பர் போலிஸாக எப்படி நடிக்க வேண்டும் என்று சிங்கத்துக்கே பாடம் எடுத்துள்ளார். ஒளிப்பதிவு மிகவும் பிரமாதம்.
முதல் ஃப்ரேமில் தன் இசை ராஜாங்கத்தை ஆரம்பித்த இசைஞானி இளையராஜா கடைசி நொடிவரை அதை நிலைநாட்டி கதைக்களத்துக்குள் நம்மை வாழ வைத்தார் என்பதை மறக்கவே முடியாது. எத்தனையெத்தனை வர்ணஜாலங்களை அந்த மேதை தூவி இருக்கிறார்.அவரின் உயிர்நாடியே இசைதான்.
கள்ளமறியாத பிஞ்சு உள்ளங்களின் வெள்ளைமன காதலையும், ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருக்கும் நம்பிக்கையையும், காதல் செய்யும்போது குழந்தைதனமான குறும்புகளையும் காட்டியுள்ளார்,
நேரில் காணும்போது கோபத்தை செல்லமாய் காட்டி காணாதபோது தவியாய் தவித்து, என்னவன் எங்கோ தவிக்கிறான் என்று உணரும் நேரம் திசையறியாத பயணத்தை அழுகையுடன் தொடங்கிய அரசியின் அன்பும். அவளை ஒரு குழந்தையாக பரிவுடன் பார்த்து அவளுக்காக தன் ஊன்உயிர் அனைத்தையும் சர்வபரித்தியாகம் செய்யும் காத்தவராயனையும் தமிழ் சினிமா லேசில் மறக்காது.
கனமாக தொடங்கினாலும் நம்மை லேசாக்கி, புன்னகையுடனும் பெருமிதத்துடனும் வழியனுப்பி வைத்த பாலாவுக்கு கோடான கோடி நன்றிகள்…..
