காதல் சொல்ல வந்தேன் படம் மூலமாக தமிழில் நாயகியாக அறிமுகமானவர் தான் மேக்னா ராஜ். இப்படத்திற்கு பின்னர் தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய படங்களில் இவர் நடிக்கவில்லை.
தமிழ்மொழி அல்லாமல் மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அந்த சமயத்தில் கன்னட நடிகரும், நடிகர் அர்ஜூனின் நெருங்கிய உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் கடந்தாண்டு சிரஞ்சீவி சார்ஜா எதிர்பாராதவிதமாக மாரடைப்பால் காலமானார். அந்த சமயத்தில் கர்ப்பமாக இருந்த மேக்னா ராஜூக்கு கடந்தாண்டு இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தை பிறந்து ஒன்பது மாதங்கள் ஆன நிலையில் மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளார் மேக்னாராஜ்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் மகன் பிறந்து ஒன்பது மாதம் ஆகிறது. கொண்டாடும் விதமாக மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளேன் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பதிவிற்கு அவரது நெருங்கிய தோழியான நஸ்ரியா உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.