கீர்த்தி சுரேஷ் உடன் ஜோடி போடும் உதயநிதி ஸ்டாலின்.. தேசிய விருதுக்கு பக்கா பிளான்

தயாரிப்பாளராக இருந்து நடிகர் அவதாரம் எடுத்த உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த தேர்தலின் போது வேட்பாளராக களமிறங்கிய உதயநிதி தற்போது அரசியல்வாதியாகவும் அசத்தி வருகிறார். இனி முழுநேர அரசியல்வாதியாக திட்டமிட்டுள்ளதால் உதயநிதி படங்களில் நடிக்க மாட்டார் என கூறப்பட்டது.

ஆனால், தற்போது உதயநிதி சில படங்களில் நடித்து வருகிறார். அதன்படி ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ஆர்டிகிள் 15 என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான நெஞ்சுக்கு நீதி படத்தில் உதயநிதி நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து விரைவில் படம் வெளியாக உள்ளது.

இதனை தொடர்ந்து பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றி படங்களை வழங்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். முன்னதாக மாரி செல்வராஜ் தனுஷ் மற்றும் துருவ் விக்ரம் நடிக்கும் படங்களை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் கேட்டு கொண்டதால் அவர் படத்தை முதலில் இயக்க உள்ளார்.

முன்னதாக மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் இணையும் இந்த புதிய படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் மற்றும் காமெடி கிங் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் படத்தின் ஹீரோயின் மற்றும் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக பிரபல இளம் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளாராம். மேலும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் மற்றும் ஏஆர் ரஹ்மான் படத்தில் இணைந்துள்ளதால் மேலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது மட்டுமில்லாமல் தேசிய விருதுக்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காகவே கதாபாத்திரத்தை தேர்வு செய்வதில் பெரும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது படக்குழு. அரசியல் மற்றும் சினிமா துறையில் இரண்டிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே உதயநிதியின் விடா முயற்சியாக உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்