சிவக்குமாரை போல் ஜென்டில்மேன் என்றால் அது அவர்தான்.. இயக்குனரே நெகிழ்ந்த சம்பவம்

நடிகர் சிவக்குமார் சினிமாவை பொறுத்த மட்டில் மிகப் பெரிய நடிகராக இல்லாமல் இருந்தாலும் அவருடைய சொந்த வாழ்க்கையை பார்த்த பிறகு சிவக்குமாரை போல் வாழவேண்டும் என்று சொல்லும் அளவிற்கு மிகவும் நேர்மையாகவும் தன்னுடைய வாழ்க்கையை நேர்த்தியாகவும் வாழக் கூடியவர். படங்களுக்கான ஒப்பந்தங்கள், நேரம், காலம் என சினிமா துறையில் அவர் ஒரு ஜென்டில்மேன் என்று சொன்னால் அது மிகையாகாது.

அப்படி சிவக்குமாரை மெச்சும் மற்றொரு நடிகரை பற்றியும் இங்கு பேசியாக வேண்டும் அவர்தான் நடிகர் ஜெய்சங்கர். நடிகர் ஜெய்சங்கர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து, பல தலைமுறை நடிகர்களோடும் இணைந்து நடித்து, இன்றும் நம் நினைவில் நிற்கும் ஒரு நடிகராக இருக்கிறார். அவர் படங்களில் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் ஹீரோவாக ஒப்பந்தம் ஆகும் முன்பே அவர் சில கேள்விகளை முன் வைப்பாராம்.

இந்தப் படம் வியாபாரம் ஆகுமா. இந்த படம் வெளியாகி உங்களுக்கு தேவையான லாபத்தை சம்பாதித்துக் கொடுக்குமா..? எல்லாத்தையும் கணக்குப் போட்டுப் பாருங்கள் அதன் பின் எனக்கு சம்பளம் கொடுங்கள் என்று கூறி விடுவாராம். அந்தக் காலத்தில் ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை இருந்தது. அப்படி படப்பிடிப்புக்கு வரக்கூடிய ஹீரோக்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும், எப்படி மிடுக்காக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஹீரோக்களுக்கு ஒரு தனி கிளாஸ் எடுக்கப்படும். ஆனால் ஜெய்சங்கர் அப்படி கிடையாது.

படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவாராம். மிகவும் சாதாரணமாக மிகவும் ஜாலியாக பேசி சிரித்து கொள்ளக் கூடியவராக இருப்பார். எவ்வளவு பிரச்சனை வந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் மிகவும் கூலாக இருக்கக்கூடிய ஆளாக வலம் வந்திருக்கிறார். மேலும் உடன் பணியாற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களோடும் அமர்ந்து சாப்பிடுவது, அவர்களுடன் ஜோக் அடிப்பது என மிகவும் ஜாலியாக இருக்க கூடிய ஆளாக இருப்பார்.

இப்படி இருக்கையில் ஒருமுறை படப்பிடிப்பு தளத்திற்கு அவர் வந்த பிறகு மழை வந்ததால் படப்பிடிப்பு கேன்சல் ஆனது. யாரும் எதிர்பாராமல் மழை நின்ற பிறகு அந்த இடம் முழுவதுமாக மழை நீரால் நிரம்பியது . அப்போது ஜெய்சங்கர் எதற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள் வாருங்கள் சூட்டிங்கை முடித்து விடுவோம் என்று கூறி ஒரு பக்கெட்டை எடுத்து எடுத்து வந்து அங்கு இருக்கும் தண்ணீரை இரைத்து ஊற்றினார்.

இதைப் பார்த்து மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் ஒரு ஹீரோவே, இப்படி களத்தில் இறங்கி விட்டார் நாம் அதைப் பார்த்துக் கொண்டிருப்பதா.? என்று கூறி அங்கிருந்த அனைவரும் தண்ணீரை இரைத்து வெளியில் ஊற்றி இருக்கின்றனர். இதனால் நின்றுபோன படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி ஜோராக நடைபெற்று இருக்கிறது. இதை பார்த்த அங்கிருந்த அனைவரும் இப்படி ஒரு ஜென்டில்மேன் தமிழ் திரை உலகிலா என்று மூக்கில் விரல் வைத்து இருக்கின்றனர். அவர் பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் மக்கள் மனதில் இன்றளவும் ஹீரோவாக இருப்பதற்கு இதுபோன்ற பல சம்பவங்கள் தான் காரணமாக இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்