அமீர் படத்தில் முழு நேர ஹீரோவாக களமிறங்கும் காமெடி நடிகர்.. சந்தானத்தை ஓரம்கட்ட திட்டமா.!

தமிழ் சினிமாவில் ஏற்கனவே இயக்குனர் முதல் இசையமைப்பாளர் வரை ஹீரோவாக களமிறங்கி நடித்து வருகிறார்கள். இதற்கிடையில் காமெடி நடிகர்களும் அவர்கள் பங்கிற்கு ஹீரோவாக ஒருபுறம் நடித்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் சந்தானம், யோகி பாபு, வடிவேலு அவ்வளவு ஏன் நம்ம சதீஷ் கூட நாய் சேகர் படம் மூலம் ஹீரோவாக களமிறங்கி விட்டார்.

இந்நிலையில் உங்களுக்கு எந்தவிதத்திலும் நான் குறைந்துபோக வில்லை என்பது போல சிக்ஸ் பேக்குடன் வந்து இனி நானும் ஹீரோ தான் என கெத்து காட்டி வருகிறார் காமெடி சூரி. இவர் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா காமெடி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதனை தொடர்ந்து பல படங்களில் காமெடி நடிகராக அதகளம் செய்துள்ள சூரி தற்போது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.

சூரி தற்போது தேசிய விருது வென்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் மெயின் ரோலில் நடித்து வருகிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சூரி நடிக்கும் அடுத்தபடம் குறித்த அறிவிப்பு ஒன்று அதிரடியாக வெளியாகி உள்ளது. அதன்படி சூரி அடுத்ததாக இயக்குனர் அமீர் இயக்கத்தில் ஹீரோவாக புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். அமீர் தமிழில் ராம், மெளனம் பேசியதே, பருத்திவீரன் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான ஆதிபகவன் படம் படுதோல்வி அடைந்ததால் அதன் பின்னர் அமீர் படங்களை இயக்குவதை தவிர்த்து விட்டார். தற்போது ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சூரியை ஹீரோவாக வைத்து அமீர் மீண்டும் இயக்குனராக ரீ என்ட்ரி கொடுப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் சூரி அடுத்தடுத்து ஹீரோவாக நடித்து வருவதால் இனி நடிகர் சந்தானம் போல் தானும் முழுநேர ஹீரோவாக தான் நடிப்பேன் என கூறி வருகிறாராம். அதனால் இனிமேல் காமெடி கேரக்டருக்கு என்னை அழைக்க வேண்டாம் என இயக்குனர்களிடம் கூறிவிட்டாராம். ஹீரோவாக தற்போது நடித்துவரும் சந்தானத்தின் மார்க்கெட்டை பிடித்து விடுவாரா சூரி என்பது போன்ற விவாதங்களை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இனி சூரி ஆட்டம் ஆரம்பம் போல..

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்