Tamil Cinema News | சினிமா செய்திகள்
அப்துல் கலாம் அய்யா சொன்னதத் தட்ட முடியல.. சினிமாவுக்கு நோ சொன்ன காமெடி நடிகர்
மிமிக்ரி மூலம் மக்களைக் கவர்ந்த காமெடி நடிகர் தாமு, சமீப காலமாக சினிமாவில் தலைகாட்டுவதை அடியோடு நிறுத்திவிட்டார்.
இயக்குநர் கே.பாலச்சந்தரின் வானமே எல்லை படத்தின் மூலம் அறிமுகமான தாமு, தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர். நடிகர் விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு முதல் சூப்பர் டூப்பர் ஹிட்டான கில்லி வரை பல்வேறு காலகட்டங்களில் அவருடன் இணைந்து பயணித்தவர். ஆனால், தற்போது நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு ஆசிரியராக மாணவர்களுடன் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறார். இதன் பின்னணியின் சுவாரஸ்யமான ஒரு சம்பவம் இருப்பதாக நினைவு கூர்கிறார் தாமு.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள், கோவை வந்தபோது அங்கு மாணவ, மாணவிகளைச் சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் முன்னிலையில் மிமிக்ரி பண்ண தாமுவை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைத்திருக்கிறார்கள். அப்துல் கலாம் அய்யா வர ஒரு மணி நேரம் தாமதமாகவே, தாமுவை திட்டமிட்டதற்கு முன்பாகவே மேடையேற்றி மிமிக்ரி பண்ணச் சொல்லியிருக்கிறார்கள்.
மாணவர்கள் முன்னிலையில் என்பதால், மிமிக்ரிக்கு பின்னணியில் இருக்கும் அறிவியல் குறித்தும், தனது பள்ளிக்கால நினைவுகள் குறித்தும் தாமு பேசியிருக்கிறார். தாமு பேசிக்கொண்டிருக்கும் போதே அப்துல் கலாம் அய்யா அவர்கள் வந்துவிட, தனது ஆசிரியர் வேலம்மாள் குறித்து தாமு பேசியதை சிரத்தையுடன் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார். அதன்பின்னர், தாமுவை அழைத்துப் பாராட்டிய அப்துல் கலாம், நீ ஒரு ஆசிரியன். மாணவர்களுக்காக, கல்விக்காக உன்னைக் கொடுத்துவிடு.
அதற்காக சினிமாவுக்கு பிரேக் விடனும் என்று சொல்லி தன்னுடைய உதவியாளர் பொன்ராஜிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதன்பின்னர், அய்யா அப்துல் கலாம் காட்டிய வழியில் தடம் பதித்து நடந்துவரும் தாமு, தற்போது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கல்வியின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து வகுப்பெடுத்து வருகிறார். மாணவர்களுக்காக `கற்க கசடற’ என்ற இதழையும் தொடங்கியிருக்கும் தாமு, இனிமேல் சினிமாவில் நடிக்கவே போவதில்லை என்று உறுதியாகக் கூறியிருக்கிறார்.
