Tamil Cinema News | சினிமா செய்திகள்
தீபாவளி ரேஸுக்கு குறி வைக்கும் கோலிவுட் சூப்பர்ஸ்டார்கள்.. கண்டிப்பாக இருவருக்கு மட்டுமே வாய்ப்பு

தீபாவளி தினத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பெரிய பட்ஜெட் படங்கள் வெளியானால், வசூல் பாதிக்கும் என்பதால் இந்த வருடம் இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸாகும் என தகவல்கள் தெரிவிக்கிறது.
வசூலை கருத்தில் கொண்டு தமிழ் சினிமாவின் புதுப்படங்கள் வாரா வாரம் வெள்ளிக்கிழமையில் வெளியிடப்பட்டு வருகிறது. இதனால், வார இறுதியில் நல்ல படத்திற்கு வசூலையும் உறுதியாக பெற்று விடலாம். அதுமட்டுமல்லாமல், பண்டிகை நாட்களிலும் பெரிய பட்ஜெட் படங்கள் மெகா வசூலை குறி வைத்து வெளியிடுவது பல வருடங்களாக நடைமுறையில் இருக்கும் வழக்கமாகி இருக்கிறது. இந்த வருடம் முதல்முறையாக தென்னிந்தியாவின் ஸ்டார்கள் தல, தளபதி மற்றும் சூர்யா படங்கள் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என படப்பிடிப்புகள் தொடங்கும் முன்னரே அறிவிக்கப்பட்டது. இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே இருப்பதால் மூன்று படக்குழுவும் பரபரப்பாக இயங்கி வருகின்றன.
சூர்யா நடிப்பில் என்.ஜி.கே. இப்படத்தை செல்வராகவன் இயக்குகிறார். சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்தின் வேலைகள் ஏறத்தாழ இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. அதேப்போல, விஜய் தனது ஆஸ்தான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்புகள் 60 சதவீதம் முடிந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. விரைவில் இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட இருக்கிறது. ஆனால், இந்த இரண்டு படங்களுடன் போட்டியில் இருக்கும் விஸ்வாசம் கடந்த மாதம் தான் படப்பிடிப்பை ஆரம்பித்து இருக்கிறது. முதல்கட்ட படப்பிடிப்பு மட்டுமே முடிந்து இருந்தாலும், இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குனர் சிவா மும்முரமாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இதே போட்டியில் விஷாலின் சண்டைக்கோழி படத்தையும் இறக்க படக்குழு திட்டமிட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் தியேட்டர் எண்ணிக்கை மிக சொற்பம் தான். ஒரே நாளில் மெகா ஹிட் நாயகர்களின் படங்கள் ரிலீஸானால் கண்டிப்பாக வசூலில் துண்டு விழும். இதனால், மற்ற இரண்டு படங்கள் தீபாவளி ரேஸில் இருந்து பின் வாங்கும் என்கிறது கோலிவுட் பட்சி. பாதி வேளைகளை முடித்த சூர்யாவும், விஜயும் மோதிக்கொள்ள தான் அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.
