Tamil Cinema News | சினிமா செய்திகள்
தங்கையை சீண்டியவர்களுக்கு மீண்டும் சவுக்கடி கொடுத்த அர்ஜூன் கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி – பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான போனி கபூர் தம்பதியினர் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி ஆவர். போனி கபூர், தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஸ்ரீதேவியை மணந்துகொண்டார். போனி கபூரின் முதல் மனைவி வழி மகன் அர்ஜூன் கபூர். இவர் தற்போது பாலிவுட்டில் கதாநாயகனாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடித்த இஸ்க்ஸாத் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியடையவே, பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம்பிடித்துவிட்டார்.
நடிகை ஸ்ரீதேவி உயிருடன் இருந்தவரையில், அவரைத் தனது சித்தியாக அர்ஜூன் கபூர் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த குடும்பத்துடன் சரியாக உறவுமுறையையும் அவர் பேணவில்லை. தனது தாயை விவாகரத்து செய்துவிட்டார் என்பதால் தந்தை போனி கபூர் மீதும் அவருக்குக் கோபம் இருந்து வந்தது. ஆனால், இந்த மனக்கசப்புகள் எல்லாம் ஸ்ரீதேவி மறைவுக்குப் பின்னர் மாறிவிட்டது. ஸ்ரீதேவி மறைவுக்குப் பின்னர் சவுதி அரேபியாவில் இருந்து அவரது உடலைப் பெற தந்தை போனி கபூருக்கு எல்லா வகையிலும் உதவியாக அர்ஜூன் கபூர் இருந்தார். அதேபோல், ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளையும் முன்னின்று செய்தார். ஸ்ரீதேவி மறைவுக்குப் பின்னர், ஜான்வி மற்றும் குஷி ஆகியோரைத் தனது தங்கைகளா ஏற்றுக்கொண்டு சகோதரப் பாசத்துடன் அர்ஜூன் கபூர் அரவணைத்து வருகிறார். சமூக வலைதளங்கள் வாயிலாகவும், நேரிலும் தனது தங்கைகளை விமர்சிப்பவர்களுக்கு அர்ஜூன் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறார்.
அந்தவகையில், ஜான்வி சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை நெட்டிசன்கள் சிலர் மிக மோசமாக விமர்சனம் செய்திருந்தனர். ஜான்வி அணிந்திருந்த ஆடையைக் குறிப்பிட்டு அவர் பேண்ட் அணிய மறந்துவிட்டதாக சிலர் கலாய்த்திருந்தனர். இந்த விமர்சனத்தை பிரபல ஆங்கில நாளேடு ஒன்று செய்தியாக்கி வெளியிட்டது. அந்த செய்தி முழுமையும் ஜான்வி கபூரை நெட்டிசன்கள் கலாய்த்தது தொடர்பாகவே எழுதப்பட்டிருந்தது. இதைக் கண்டு கொதித்த அர்ஜூன் கபூர் சகோதரர் என்ற முறையில் விமர்சனம் செய்தவர்களுக்கும், அந்த ஆங்கிலப் பத்திரிகைக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார்.
அந்த நாளேட்டின் பெயரைக் குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ள அர்ஜூன் கபூர், `இரண்டு பேர் செய்த விமர்சனம், ஒரு மிகப்பெரிய பத்திரிகையின் இணையதளத்தில் செய்தியாக வெளியாகியிருக்கிறது. விமர்சனங்களுக்கு ஊடகங்கள் அளிக்கும் முக்கியத்துவம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. மேலும், நாம் பதிலடி கொடுப்பதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். இதுபோன்ற மோசமான விமர்சனங்களைக் கவனித்து செய்தியாக்காமல் கடந்துசெல்வதே, அவற்றை மறக்கடிப்பதற்குச் சரியான வழி’ என்று காட்டமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
