சினிமாவில் ஹீரோக்கள் அனைவரும் நிஜ வாழ்வில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பல சாகசங்களை செய்வார்கள். அவர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சோனு சூட், சூர்யா போன்ற சில நடிகர்கள் நிஜவாழ்வில் மக்களுக்கு உதவுவது மூலம் ஹீரோக்களாக உள்ளனர்.
ஆனால் இவர்களை எல்லாம் தாண்டி ஒரு மனிதர் ரியல் லைப் ஹீரோவாக வலம் வருகிறார். அவர் வேறு யாரும் அல்ல பல மராத்திய மொழி திரைப்படங்களில் நடித்து பல விருதுகளை பெற்றுள்ள நடிகர் நானா படேகர் தான்.
இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற காலா திரைபடத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் சிறந்த நடிப்புக்காக 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார். தற்போது சினிமாவில் ஹீரோக்கள் தான் கோடிகளில் சம்பளம் பெறுவார்கள்.
ஆனால் வில்லன் நடிகராக இருந்த நானா படேகர் கோடிகளில் சம்பளம் பெற்ற பெருமைக்குரியவர். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக பல சிக்கலான காட்சிகளிலும் டூப் இல்லாமல் நடித்து சாதனை படைத்துள்ளார்.
சிறுவயதில் இருந்தே பல கஷ்டங்களை பார்த்து வளர்ந்த இவர் ஒரு நடிகராக தனக்கு கிடைக்கும் சம்பளத்தில் 90 சதவீதத்தை ஏழை எளிய மக்களுக்கு வழங்கியுள்ளார். மேலும் விதவைப் பெண்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும் வகையில் பல திட்டங்களை அவர் செய்துள்ளார்.
இதுதவிர விவசாயிகளுக்கு பல உதவிகளையும் செய்துள்ளார். சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த நான்கு கிராமங்களை தத்தெடுத்து அவர்களுக்கு பல உதவிகளை செய்து மக்களின் மனதில் மிக உயர்ந்த மனிதராக சிம்மாசனமிட்டு அமர்ந்து உள்ளார்.
இவர் ஒரு திரைப்படத்தில் இராணுவ அதிகாரியாக நடிப்பதற்காக உண்மையிலேயே ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளார். அப்போது நடந்த கார்கில் போரில் அவர் சிறப்பாக பணியாற்றியுள்ளார். அதற்காக அவருக்கு இந்திய ராணுவத்தில் கேப்டன் ரேங்க் கொடுக்கப்பட்டது.
இவ்வளவு சிறப்புகளையும், புகழையும் பெற்றுள்ள இவர் தனிப்பட்ட வாழ்வில் மிகவும் எளிமையான மனிதராக வாழ்ந்து வருகிறார். இப்படிப்பட்ட மனிதரை மக்கள் ரியல் லைப் ஹீரோவாக கொண்டாடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.