தனது யதார்த்தமான நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. யதார்த்தமான நடிப்பு, எளிமையான தோற்றம் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட நடிகர் என்றும் கூறலாம். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பையன் போல தோற்றமளிக்கும் விஜய் சேதுபதி ரசிகர்களிடம் அன்பாக பழகுவதால், இவரை மக்கள் செல்வன் என செல்லமாக அழைக்கிறார்கள்.
நடிச்சா ஹீரோவா தான் நடிப்பேன் என கூறாமல் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும், துணிந்து ஏற்று நடிப்பார். ஹீரோ, வில்லன், முதியவர் என அனைத்து கதாபாத்திரங்களிலும், கலக்கிய விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்தும் தனது நடிப்பு பசியை தீர்த்துள்ளார். படத்தில் கதாபாத்திரமாக நடிக்காமல் கதாபாத்திரமாகவே வாழும் அளவிற்கு கதாபாத்திரத்தோடு ஒன்றி விடுவார்.
ஆரம்ப காலத்தில் லீ, வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் தலையைக் காட்டினார். பின்னர் தான் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்தார். இவர் நாயகனாக நடித்த முதல் படமே தேசிய விருது பெற்றது. இதனை அடுத்து 2012ல் இவர் நடித்த 3 படங்களும் மெகா ஹிட் ஆனது. பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், சூது கவ்வும் நடிப்பில் மிரட்டியிருப்பார். இதனைத் தொடர்ந்து படவாய்ப்புகள் அடுத்தடுத்து குவியத் தொடங்கியது.
தனது படங்களின் தொடர் வெற்றி ரகசியம் குறித்து பேட்டி ஒன்றில் கூறிய விஜய் சேதுபதி, “படத்தை ரசிகனின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். எப்படி நடித்தால் ரசிகனுக்குப் பிடிக்கும் என்பதை ஸ்டடி பண்ணி, நாமே ஒர்க் அவுட் செய்து ரிகர்சல் எடுக்க வேண்டும். அதன்பிறகு தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிக்க வேண்டும். நான் அதைத்தான் செய்கிறேன்” என மிக இயல்பாக கூறினார்.
தற்போது கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம் ஆகிய படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, ஹீரோவாக மட்டுமே நடிக்கவேண்டும் என நினைக்காமல், ஒவ்வொரு கதையையும் தேர்வு செய்து நடித்து வருவதும் அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளது.
அவ்வப்போது கிடைக்கும் கேப்பில், டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். அதில் நல்ல வருமானமும் பார்த்து வருகிறார்…. நீ கலக்கு சித்தப்பு…