சவுகார் ஜானகி நடிப்பில் மிரட்டிய 5 படங்கள்.. ரஜினியை வயிறு குலுங்க சிரிக்க வைத்த தில்லுமுல்லு

பழம்பெரும் நடிகையான சவுகார் ஜானகி தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் திருமணம் ஆன பிறகுதான் கதாநாயகியாக நடித்தார் என்பது கூடுதல் தகவல்.

பல திரைப்படங்களில் நாயகியாக நடித்த இவர் 1975 க்குப் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார். இவருடைய அற்புதமான நடிப்பிற்காக பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது, கலைமாமணி போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் எத்தனையோ திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்களை கவர்ந்த சில திரைப்படங்கள் இருக்கிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் மிரட்டிய 5 திரைப்படங்கள் என்ன என்பதைப் பற்றி இங்கு காண்போம்.

எதிர்நீச்சல்: கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1968ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதில் சௌகார் ஜானகி, நடிகர் ஸ்ரீகாந்துக்கு மனைவியாக ஐயர் மாமி கேரக்டரில் நடித்திருப்பார். நாகேஷுக்கு எதிராக இவர் செய்யும் வில்லத்தனமான வேலைகள் ரசிகர்களை ஈர்த்து. அதிலும் அடுத்தாத்து அம்புஜத்தை என்ற பாடல் பயங்கர ஹிட் ஆனது.

இரு கோடுகள்: கே பாலச்சந்தர் இயக்கிய இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயந்தி, சௌகார் ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள். இதில் ஜெமினியின் முதல் மனைவியாக இருக்கும் சௌகார் ஜானகியின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருக்கும். காதல், பிரிவு, சோகம் என்று பல உணர்ச்சிகளை அவர் காட்டியிருப்பார். அந்த வகையில் அவருக்கு இந்த படம் ஒரு பேர் சொல்லும் படமாக அமைந்தது.

காவிய தலைவி: கே பாலச்சந்தர் இயக்கிய இந்த திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி இணைந்து நடித்தனர். முழுக்க முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் சவுகார்ஜானகியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

புதிய பறவை: தாதா மிராசி இயக்கிய இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரோஜாதேவி, சவுகார் ஜானகி ஆகியோர் நடித்திருப்பார்கள். அதில் குடிப்பழக்கத்துக்கு ஆளான ஒருவராக, சிவாஜியின் மனைவி கேரக்டரில் சௌகார் ஜானகி நடித்திருப்பார். அதில் இடம்பெற்ற பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது.

தில்லு முல்லு: பாலச்சந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்திய இந்த திரைப்படம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அதுமட்டுமல்லாமல் படத்தில் பல தில்லுமுல்லு வேலைகளை செய்யும் ரஜினி சவுகார் ஜானகியை அம்மாவாக நடிக்க கேட்பார்.

அவரும் அம்மாவாக நடிக்க வந்து தேங்காய் சீனிவாசன் இடம் மாட்டிக்கொண்டு முழிப்பார். சூட்டிங் ஸ்பாட்டில் அவருடைய நடிப்பை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழுந்து விழுந்து சிரித்தாராம். அந்த அளவுக்கு அவர் கேரக்டராகவே மாறி போய் காமெடியில் கலக்கியதாக பலராலும் பாராட்டப்பட்டார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்