Tamil Cinema News | சினிமா செய்திகள்
அவெஞ்சர்ஸ் படம் பார்த்தவருக்கு நடந்த விபரீதம்..
ஹாலிவுட்டின் மாஸ் ஓபனிங் படமாக வெளியாகி இருக்கும் அவெஞ்சர்ஸ் படத்தை திரையரங்கில் பார்க்க வந்த ரசிகர் மாரடைப்பால் மரணமடைந்த தகவல்கள் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தி அவெஞ்சர்ஸ் படத்தின் முதல் பாகம் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் படைப்பாக 2012ல் வெளியானது. தொடர்ந்து, 2015ம் ஆண்டு இதன் அடுத்த பாகமாக ‘அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்’ வெளியாகியது. இரண்டு படங்களுமே மாஸ் ஹிட் அடித்தது. தொடர்ந்து, கடைசி பாகமாக ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்ஸ்’ தயாராகியுள்ளது. இந்தியாவில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தை ஆண்டனி ருஸோ, ஜோ ருஸோ இயக்கி உள்ளனர். இந்த பாகத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் ஹெமஸ்வோர்த், ஸ்கார்லெட் ஜான்சன், டாம் ஹாலந்த், கிறில் பிராட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கடந்த வாரம் வெளியான இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.150 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. உலகளவில் ரூ. 5 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருக்கிறது. நாளுக்கு நாள் இப்படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தை திரையரங்கில் காண சென்ற ரசிகர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்து இருப்பது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திரா மாநிலத்தில் புகழ்பெற்ற திரையரங்கில் பாட்சா என்பவர் நண்பர்களுடன் படம் பார்க்க சென்று இருக்கிறார். 3டி வடிவில் ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டிவார்ஸ்’ படத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருந்து இருக்கிறார்.

Avengers
விறுவிறுப்பான சண்டை காட்சியை பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதில், பதறிய அவர் நண்பர்கள் உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு வரும் முன்னரே பாட்சா பரிதாபமாக உயிர் இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திரைப்படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
