Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் திருமணத்தின்போதுதான் அந்த உண்மையை அறிந்துகொண்டேன்: கவிஞர் வைரமுத்து

சமூகப் போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் திரைப்படம் தயாராகியுள்ளது. புதுமுகம் விக்கி இயக்கியுள்ள அந்த படத்தில் டிராபிக் ராமசாமியாக டைட்டில் ரோலில் நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார்.
இந்த படத்தில் டிராபிக் ராமசாமியின் மனைவி கதாபாத்திரத்தில் நடிகை ரோகிணி நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், குஷ்பு, சீமான், விஜய் ஆண்டனி, மோகன் ராமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். க்ரீன் சிக்னல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் முடிந்து ரிலீஸூக்குத் தயாராகி இருக்கிறது.
டிராபிக் ராமசாமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் படத்துக்காக சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளார். சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமி, நிஜ வாழ்வில் போலீஸார் மற்றும் அரசியல் கட்சியினருக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். மனித உரிமை மீறல்கள், சமூக அவலங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்து தீர்வு காண முயற்சிப்பவர். இதனால், பல்வேறு தரப்பிலும் அவருக்கு எதிர்ப்புகள் வலுத்து வருவதோடு, சில இடங்களில் தாக்குதலுக்கும் உள்ளாகியிருக்கிறார்.
அதுபோன்ற காட்சிகளில் எஸ்.ஏ.சந்திரசேகர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதுடன், காட்சிகள் உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக டூப் போடாமல் நடித்துக் கொடுத்திருக்கிறாராம். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் டீசரை, நேர்மையான அதிகாரி என மக்கள் மத்தியில் பெயரெடுத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், எஸ்.ஏ.சந்திரசேகரிடன் உதவியாளராக இருந்த ஷங்கர், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட முன்னணி திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கும் எனக்கும் நெருக்கமான பழக்கம் இல்லை. இருப்பினும், என் மீதும் என் எழுத்தின் மீதும் அவர் மதிப்பு வைத்திருக்கிறார் என்பதை நான் அறிவேன். சில அரிய தருணங்களில் மட்டுமே நாங்கள் சந்தித்து அதை பரிமாறி இருக்கிறோம். எங்கள் நட்பு நெருக்கமானதாக இல்லாவிடிலும் மிகவும் மதிப்புமிக்கது. அதை எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனான நடிகர் விஜயின் திருமணத்தின்போதுதான் நான் அறிந்தேன்.
விஜய் திருமணத்துக்கு எவ்வளவோ பெரிய மனிதர்களும், பிரபலங்களும் வந்திருந்தனர். இருப்பினும் விஜய் திருமணத்தை நடத்தி வைக்க என்னையும், வலம்புரி ஜானையும் மட்டுமே எஸ்.ஏ.சந்திரசேகர் மேடைக்கு அழைத்துச் சென்றார். அவர் நினைத்திருந்தால் யாரை வேண்டுமானாலும் மேடைக்கு அழைத்திருக்கலாம். ஆனால் என்னை மேடைக்கு அழைத்து அவர் மரியாதை செய்தார். அதேபோல், இன்று இங்கே அழைத்து இருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இதிலிருந்து அவர் மனதில் நான் இருப்பதாக என் உள்மனது சொல்லியது.
இந்த டிராபிக் ராமசாமி மாதிரி ஒரு கதையைப் படமாக்க சமூக அக்கறை வேண்டும். அது எஸ்.ஏ.சிக்கு இருக்கிறது. அவர் வேறு கதையைப் படமாக எடுத்திருக்கலாம். ஆனால், வியாபாரம் என்பது இரண்டாம்பட்சம். டிராபிக் ராமசாமி என்கிற நிகழ்காலத் தத்துவம் தன்னை ஈர்த்திருக்கிறது. அதில் ஒரு படமாக்கும் அளவுக்கு கச்சாப் பொருள் இருக்கிறது என்று நம்பி ஈர்க்கப்பட்டிருக்கிறார். அதைப் படமாக்க வேண்டும் என்றால் ஒரு துணிச்சல் வேண்டும். அது இவருக்கு இருக்கிறது என்று வைரமுத்து பேசினார்.
