சிவகுமார் வில்லனாக நடித்த ஒரே படம்.. அதுவும் நம்ம தலைவர் தான் ஹீரோ

தமிழ் சினிமாவில் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படும் பெருமைக்குரியவர் நடிகர் சிவகுமார். இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார். அவர் நடிப்பு தவிர ஓவியம், சொற்பொழிவு என்று பல திறமைகளை கொண்டவர்.

இவர் 1965ஆம் ஆண்டு காக்கும் கரங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த சிவகுமார் முதல் முதலாக ஒரு திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான புவனா ஒரு கேள்விக்குறி திரைப்படத்தில் தான் சிவகுமார் வில்லனாக நடித்திருந்தார்.

அந்தத் திரைப்படத்தில் சிவகுமார் ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றுபவர் போன்று நடித்திருப்பார். அவரை அப்படி ஒரு கதாபாத்திரத்தில் பார்த்த சிவகுமாரின் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். அவர்களால் அவரை அப்படி ஒரு கேரக்டரில் ஏற்கவும் முடியவில்லை.

அந்த திரைப்படத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து இருப்பார். அதுவரை பல திரைப் படங்களில் வில்லனாக மட்டுமே நடித்து வந்த சூப்பர் ஸ்டார் இந்த திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். இப்படி சிவக்குமார் மற்றும் ரஜினி இருவரையும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் பார்த்த ரசிகர்களுக்கு மிகவும் வியப்பாக இருந்தது.

சிவகுமாரின் முகத்திற்கு இந்த வில்லன் கேரக்டர் சற்றும் பொருத்தமில்லை என்று பலரும் கூறிய காரணத்தால் அதன்பிறகு சிவகுமார் அந்த மாதிரியான வில்லன் கேரக்டரில் நடிக்க வில்லை, தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக மட்டுமே நடித்தார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்