Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆண் தேவதை சிறப்பு காட்சிகளை பார்த்த சினிமா பிரபலங்களின் கருத்து.!
ரெட்டச்சுழி படத்தை தொடர்ந்து இயக்குனர் தாமிரா டைரக்சனில் உருவாகியுள்ள படம் ‘ஆண் தேவதை’. சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடித்துள்ள இந்தப்படத்தை தனது ‘சிகரம் சினிமாஸ்’ நிறுவனத்துடன் ஃபக்ருதீன் என்பவருடன் இணைந்து தயாரித்துள்ளார் தாமிரா. விஜய்மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு, ஜாக்சன் கலை இயக்கம் என முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இந்தப்படத்தில் பணிபுரிந்துள்ளனர்..
இந்தப்படம் வரும் அக்-12ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதனையொட்டி திரையுலக பிரபலங்களுக்கு இந்தப்படத்தின் சிறப்புக்காட்சி திரையிட்டு காட்டப்பட்டது. நடிகர் சத்யராஜ், இயக்குனர்கள் பா.ரஞ்சித், அமீர், மாரி செல்வராஜ், மீரா கதிரவன் கலையரசன், காளி வெங்கட் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தப்படத்தின் சிறப்புக்காட்சியை கண்டுகளித்தனர்.
படம் பார்த்தபின் சத்யராஜ் கூறியபோது, “ரொம்பவே யதார்த்தமான படம்.. வாழ்க்கைல என்ன நடக்குதோ, குறிப்பாக மிடில் கிளாஸ் வாழ்க்கையில் இருக்கிற பிரச்சனையை சினிமாவுக்கான எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் நல்லபடியா சொல்லியிருக்கிறார் தாமிரா. இந்தப்படம் நிச்சயமா ஒரு பாடமா அமையும். இந்தமாதிரி படங்கள் நிறைய வரவேண்டும்” என்றார்.
இயக்குனர் பா.ரஞ்சித் படத்தை பற்றி கூறும்போது, “இன்றைய மிடில் கிளாஸ் வாழ்க்கையில் குழந்தை வளர்ப்பை பற்றி, அதன் சிரமங்கள் பற்றி எளிமையா சொல்லியிருக்கிறார். குறிப்பா இன்றைய குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய குட் டச், பேட் டச் பற்றி சொல்லியிருக்கிறார். ஒரு கதையை அதனுடைய எளிமைத்தன்மையிலேயே சொல்லி முடிச்சிருக்கார். அந்த இரண்டு குழந்தைகளும் நன்றாக நடித்துள்ளார்கள். அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது” என்றார்.
இயக்குனர் அமீர் பேசும்போது, “தாமிராவை ஒரு எழுத்தாளரா தெரியும். ஒரு இயக்குனராகவும் இப்போது தன்னை நிரூபித்திருக்கிறார். இன்றைக்கு நகரத்தில் இருக்கும் கணவன் மனைவிக்கான படமாக இது இருக்கிறது.. அவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் இது” என்றார்.
