Tamil Cinema News | சினிமா செய்திகள்
படப்பிடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி – கமல்ஹாசன்
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
நேற்று இரவு ஒன்பது முப்பது மணி அளவில் சென்னை நசரத்பேட்டை யிலுள்ள பிலிம் சிட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது லைட்டிங் வைப்பதற்காக ராட்சத கிரேன் வைக்கப்பட்டிருந்தது.
அந்த கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குனர் கிருஷ்ணா உள்ளிட்ட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 10 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள 3 பேரின் உடல்களுக்கு கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி செலுத்திய பின் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியன் – 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து என் குடும்பத்தில் நிகழ்ந்ததாக கருதுகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியன் -2 படபிடிப்பில் இணைந்த கிருஷ்ணா இன்று உயிருடன் இல்லை.
நான் நூலிழையில் உயிர் பிழைத்தேன். 4 நொடிகளுக்கு முன்புவரை நான் அங்குதான் இருந்தேன். இந்தியன் -2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கப்படும்.
இது போன்ற விபத்து இனி நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நேரம் இது. சினிமா துறையில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது என கமல்ஹாசன் வேதனை தெரிவித்தார்.
